அதிமுக கூட்டணியில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு 10 சீட்?!

இதன் விளைவாக அவரது ரசிகர்கள் சிலர் இந்தத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் விஜய் ரசிகர் மன்றம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு உள்ளது. அதன் மூலம் மக்கள் நலப்பணிகள் நடந்து வருகின்றன. நாகையில் மீனவர்களுக்கு எதிராக நடந்த விஜய் கண்டன கூட்டத்தையும் இந்த மக்கள் இயக்கம்தான் ஏற்பாடு செய்தது. ஏராளமான ரசிகர்கள் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்தனர்.
அடுத்தக்கட்டமாக வருகிற சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் இயக்கம் நேரடியாக ஈடுபடுகிறது. இந்த இயக்கத்தின் பொறுப்பில் இருப்பவர்கள் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் அவர்களை இறக்க பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. ஜெயலலிதாவை, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இரண்டு முறை சந்தித்தார். இந்த சந்திப்பின் நோக்கமே சீட்டு கேட்பதுதான் என்று இப்போது தெரியவந்துள்ளது.
விஜய் ரசிகர்கள் தேர்தலில் போட்டியிடுவதை எஸ்.ஏ.சந்திரசேகரனும் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறும்போது, "ரசிகர்களுக்கு உரிய அங்கீகாரத்தை யாராவது கொடுத்தால் அவர்களுக்கு விஜய்யின் ஆதரவு இருக்கும். அங்கீகாரம் கிடைக்கும்போது அந்த ரசிகர்களுக்காக அவர்களுடைய வெற்றிகளுக்காக ஆதரவு கொடுக்கும் கட்சிகளுக்கு விஜய்யின் ஆதரவு இருக்கும்", என்று தெளிவுபடுத்தினார்.
இதன்மூலம் ரசிகர்கள் போட்டியிட தொகுதி ஒதுக்கும் கட்சிக்கு ஆதரவாக விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் ஜெயலலிதாவை விஜய் விரைவில் சந்தித்து பேசுவார் என்றும், அப்போது கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு போன்றவை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. விஜய்யின் மக்கள் இயக்கம் 10 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகத் தெரிகிறது.
இவற்றில் ஒரு தொகுதியில் விஜய் தந்தை எஸ் ஏ சந்திரசேகரனும் போட்டியிடுவார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications