பிரணாப் முகர்ஜியின் பட்ஜெட் பாராட்டுக்குரியது-கருணாநிதி பாராட்டு
சென்னை: அனைத்துத் தரப்பு மக்களையும் மனதில் கொண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள பிரணாப் முகர்ஜி பாராட்டுக்குரியவர் என்று முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
உலக அளவிலான பொருளாதார தேக்க நிலையின் பாதிப்பு இந்தியப் பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்காத வகையிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீண்டும் ஒரு சீரான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லக் கூடியதாகவும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
விவசாயத் துறையின் உற்பத்தியை ஊக்குவிக்கவும் விளை பொருள்களின் சேதாரத்தைக் குறைக்கவும் உணவு பதப்படுத்தலை ஊக்குவிக்கவும் விவசாயப் பணிகளுக்கு கடனுதவியைத் தடையின்றி கிடைக்கவும் பல்வேறு சிறப்பான திட்டங்கள் இதில் உள்ளன.
60 ஆயிரம் கிராமங்களில் பருப்பு வகைகளைப் பயிரிடவும் 60 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் எண்ணெய் பனைப் பயிர்களை பயிரிடவும் காய்கறி உற்பத்தியை ஊக்குவிக்கவும், வறட்சிப் பகுதிகளில் கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற பயிர்களின் சாகுபடியை அதிகரிக்கவும் தலா ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
விவசாயிகளுக்கான பயிர்க் கடனை ரூ.3.75 லட்சம் கோடியிலிருந்து ரூ. 4.75 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளதும் முறையாக கடனைத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு ஏற்கெனவே இருந்து வந்த வட்டிச் சலுகையை 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தியுள்ளதும் பாராட்டத்தக்கது.
தொழிற்சாலைகளின் கட்டமைப்பை மேம்படுத்த கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு 23.3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதும் சமூக நலத் திட்டங்களுக்காக மத்திய அரசின் ஒதுக்கீடு இந்த ஆண்டு 17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதும் சிறப்பான அம்சங்கள்.
கல்வித் திட்டங்களுக்காக குறிப்பாக சர்வ சிக்ஷா அபியன் திட்டத்துக்காக கடந்த ஆண்டை விட 40 சதவீதம் நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
வரிச் சலுகையைப் பொருத்தவரை தனி நபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு ரூ.1.60 லட்சத்திலிருந்து ரூ.1.80 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வயது முதிர்ந்தோருக்கான சலுகை பெறும் அதிகபட்ச வயது 65 லிருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ளதும் அவர்களுக்கான வருமான உச்ச வரம்பு ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதும் தனி நபர்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என நம்புகிறேன்.
தமிழக அரசின் நெடுநாளைய கோரிக்கையான ஜாதி வாரி கணக்கெடுப்பை வரும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சிக்குரியது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications