தெலுங்கானாவில் ரயில் மறியல்: போக்குவரத்து ஸ்தம்பித்தது
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு இன்று ஹைதராபாத் உள்ளிட்ட 9 தெலுங்கானா மாவட்டங்களில் ரயில் மறியல் நடக்கிறது. இதனால் அங்கு ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
தெலுங்கானா ஆதரவாளர்கள் ஹைதராபாத் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள், நல்கொண்டா, வாரங்கால், நிஜாமாபாத், கம்மம் மற்றும் பிற மாவட்டங்களில் ரயில்களை நிறுத்தியுள்ளனர். இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் 25 எக்ஸ்பிரஸ் ரயில்களை ரத்து செய்துள்ளனர். இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இன்று காலை 6 மணிக்கு துவங்கிய இந்த ரயில் மறியலுக்கு தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு அழைப்பு விடுத்துள்ளது. இன்று மாலை 6 மணி வரை மறியல் தொடரும். அவர்கள் நாடாளுமன்றத்தில் தெலுங்கானாவை தனி மாநிலமாக்க மசோதா கொண்டுவருமாறு வலியுறுத்தியுள்ளனர்.
மறியலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜெய் தெலுங்கானா என்று கோஷம் எழுப்பிக் கொண்டும், கொடி, பேனர்கள் வைத்துக் கொண்டும் உள்ளனர். தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பாஜக மற்றும் தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழுவினர் ரயில் தண்டவாளங்களில் நின்று கொண்டு மறியல் செய்கின்றனர். சில இடங்களில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த மறியலுக்கு காங்கிரஸைச் சேர்ந்த தெலுங்கானா தலைவர்கள், தெலுங்கு தேசம் கட்சி, தெலுங்கானா பிரஜா முன்னணி மற்றும் தெலுங்கானா வழக்கறிஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications