இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

இலங்கையைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா தற்போது ராஜபக்சே அரசில் அமைச்சராக இருக்கிறார். இவர் கடந்த 1986ம் ஆண்டு சென்னையில் தஞ்சம் புகுந்து தங்கியிருந்தபோது சூளைமேட்டைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரைக் கொலை செய்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
பின்னர் தேவானந்தா இலங்கைக்குத் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளி என்று 1994ம் ஆண்டு சென்னை கோர்ட் அறிவித்தது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ராஜபக்சேவுடன் ஜோடியாக டெல்லிக்கு வந்திருந்தார் டக்ளஸ். பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து கை குலுக்கி வரவேற்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேடப்படும் குற்றவாளியை பிரதமர் மன்மோகன்சிங் இப்படியா வரவேற்பது என்று கண்டனங்கள் எழுந்தன. டக்ளஸை கைது செய்யவும் கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து ராஜபக்சேவுடன் சேர்ந்து படு பத்திரமாக இருந்து பின்னர் இலங்கைக்குப் போய் விட்டார் டக்ளஸ்.
இந்த நிலையில், தனது பெயரை தேடப்படுவோர் பட்டியலிலிருந்து நீக்கக் கோரியும், முன்ஜாமீன் அளிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் டக்ளஸ். இந்த இரு கோரிக்கைகளையும் இன்று உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
உரிய நீதிமன்றத்தில் டக்ளஸ் நேரில் ஆஜராகி முன்ஜாமீன் பெறலாம். அவரது பெயரை தேடப்படுவோர் பட்டியலிலிருந்து அதுவரை நீக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறி விட்டது.












Click it and Unblock the Notifications