புதுவை முன்னாள் முதல்வர்கள் ப சண்முகம் - ரங்கசாமி சந்திப்பு!

காங்கிரஸிலிருந்து விலகி புதிதாக என் ஆர் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள முன்னாள் முதல்வர் என் ரங்கசாமியும், அக்கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான ப சண்முகமும் திடீரென்று சந்தித்துப் பேசியுள்ளது புதுவை அரசியலில் பெரும் திருப்பத்துக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.
புதுவை நெடுங்காட்டில் உள்ளது ப சண்முகத்தின் வீடு. இங்கு திடீரென வருகை தந்த என் ரங்கசாமி, அவருடன் 15 நிமிடம் தனியாகப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது, சண்முகத்தின் ஆதரவு மற்றும் ஆசியை ரங்கசாமி கோரியதாகவும், அவருக்கு தாராள ஆசி வழங்கிய சண்முகம், கட்சியை நடத்த யோசனைகள் சிலவற்றைச் சொன்னதாகவும் கூறப்படுகிறது.
சந்திரகாசு இணைந்தார்:
முன்னதாக, ரங்கசாமியின் புதிய கட்சியில் புதுவை முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவலும் அவரது ஆதரவாளர்களும் இணைந்தனர். இதற்கான விழா, நெடுங்காட்டில் நடந்தது.
இந்த விழாவில் பேசிய ரங்கசாமி, "முன்னாள் அமைச்சர் சந்திரகாசு என்.ஆர்.காங்கிரசில் இணையும் இந்த விழாவை நெடுங்காட்டில் நடத்த முக்கியமான காரணம் உள்ளது.
நெடுங்காடு பகுதிக்கென்று தனி பெருமை உள்ளது. நெடுங்காடு என்றால் புதுவை அரசியலில் யாருக்கும் தெரியாமல் இருக்க முடியாது. பல புதுமைகளை உருவாக்கித் தருவது நெடுங்காடுதான்.
நெடுங்காடு தலைவர்களுக்கு சக்தி உள்ளது. தலைவர் என்றால் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு எடுத்துக்காட்டாக இப்பகுதியை சேர்ந்த தலைவர் ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் யார்? என்பது உங்கள் அனைவருக்குமே நன்றாகத் தெரியும்.
அவர் முதல்வராக பதவி வகித்தபோது, "நான் வழிவிட்டுச் செல்கிறேன். நீதான் புதுச்சேரி மாநிலத்தை வழிநடத்திச் செல்ல வேண்டும். நீதான் அடுத்த முதல்வர்' என்று என்னிடம் கூறினார்.
ஒரு கட்சியின் தலைவராக அவர் புதுவையில் கட்சியை வழி நடத்திய விதம், முதல்வராக பதவி வகித்த விதங்களைப் பார்க்கும்போது நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளது. அரசியலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்", என்றார்.
விழா முடிந்ததும் ரங்கசாமி திருநள்ளாறில் உள்ள ம.தி.மு.க எம்.எல்.ஏ.வான பி.ஆர்.சிவாவை இரவு 12 மணியளவில் அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினார். முன்னதாக சிவா எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக வந்திருந்து ரங்கசாமிக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.












Click it and Unblock the Notifications