சிம் கார்டு வாங்குங்கள், அம்மா பேசுவார்-அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவு!
தென்காசி: அதிமுக தேர்தல் பணிக்குழுவினர் அனைவரும் புதிய சிம்கார்டுகள் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த எண்ணில் எப்போது வேண்டுமானாலும் கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசுவார் என தென்காசியில் நடந்த ரகசிய ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 13ம் தேதி நடக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் களத்தில் ஈடுபடுவோரை உற்சாகப்படுத்தும் வகையில் அதிமுக பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
செல்போன் மூலம் ஓட்டுகள் கேட்டு தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளும் வகையிலும், தேர்தல் களத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பணிகுழுவினர் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் வகையிலும் புதிய சிம்கார்டுகள் பெற்றுக் கொள்ள வேண்டுமென அதிமுக தலைமையிடம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழு்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தேர்தல் பணிகுழுவினருக்கு புதிய சிம்கார்டுகளை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களும், நிர்வாகிகளும் வாங்கி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பணிகுழுவில் ஈடுபட்டுள்ள நிர்வாகிகளுக்கான ரகசிய ஆலோசனை கூட்டம் தென்காசியில் நடந்தது. இக்கூட்டத்தில் புறநகர் மாவட்டத்தில் உள்ள அதிமுக, மாநில, மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி சார்பு அணி நிர்வாகிகளும் தேர்தல் பணிகுழுவினரும் புதிய சிம்கார்டுகள் வாங்கி கொள்ள வேண்டுமேன தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் வரக்கூடிய புதிய சிம்கார்டு நம்பர் கட்சி தலைமைக்கும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தேர்தல் பணிகுழுவினருடன் கட்சியின் பொது செயலாளர் இதன் மூலம் எந்த நேரமும் தொடர்பு கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் பணிகுழுவினர் மிகுந்த ஆர்வத்துடன் சிம்கார்டு பெற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
எதிர்கட்சிகளின் தேர்தல் யுக்திகளுககு மத்தியில் அதிமுக கையாண்டுள்ள சிம்கார்டு தேர்தல் சிஸ்டம் கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி தேர்தல் பணிகுழுவும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications