டி.ஆர்.எஸ். பாணியில் சுயேச்சைகளை களமிறக்க அதிமுக திட்டம்
சென்னை: ஆந்திராவில், தெலுங்கானா பகுதியில் நடந்த இடைத் தேர்தலின்போது பெருமளவில் சுயேச்சைகளை தாங்களே களம் இறக்கி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திற்குப் பதில் வாக்குச்சீட்டு முறையை உருவாக்கிய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி போல இங்கும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வர அதிமுக ரகசியத் திட்டம் தீட்டியுள்ளதாக தெரிகிறது.
தெலுங்கானா பகுதியில் சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்த விடாமல் தடுப்பதற்காக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஒரு தந்திரத்தை கையாண்டது. அதன்படி அவர்களே, ஏராளமான பேரை சுயேச்சை வேட்பாளர்களாக வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்தனர். இந்த நூதன டெக்னிக்கால் மிரண்டு போனது தேர்தல் ஆணையம்.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் இந்த திட்டத்திற்கு பாதி வெற்றி கிடைத்தது. சில தொகுதிகளில் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டிய நிலைக்கு தேர்தல் ஆணையம் தள்ளப்பட்டது.
தற்போது இதே டெக்னிக்கை தமிழகத்திலும் அமல்படுத்த அதிமுக தரப்பு யோசித்து வருவதாக கூறப்படுகிறது. 234 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் சுயேச்சைகளை களம் இறக்கி, அதாவது குறைந்தது 60 பேரை களம் இறக்கி அதன் மூலம் அனைத்து தொகுதிகளிலும் வாக்குச் சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த அதிமுக தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதிமுக தொடர்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதிமுக மட்டுமல்லாமல், பாமக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மின்னணு வாக்குப் பதிவு முறையில், பெரும் மோசடிகள் நடப்பதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் குற்றச்சாட்டாகும். இதை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இந்த பின்னணியில்தான் வாக்குச் சீட்டு முறைக்கு மீண்டும் மாறுவதற்காக இப்படி ஒரு நூதன திட்டத்தை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கையாண்டு பாதி வெற்றியும் பெற்றது. தற்போது அதே பார்முலாவை தமிழகத்திலும் அமல்படுத்த அதிமுக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இதனால் அதிமுகவுக்கு எந்த லாபமும் கிடைக்காது என்று அதிமுக தரப்பிலேயே அவநம்பிக்கையுடன் கூறுகின்றனராம்.