முல்லைப் பெரியாறு அணை ஆய்வில் தமிழகம் பங்கேற்பு-அதிர்ச்சியில் கேரளா
தேக்கடி: உச்சநீதிமன்ற உயர் மட்டக் கமிட்டியின் உத்தரவின் பேரில், முல்லைப் பெரியாறு அணையில் அதிகாரிகள் ஆய்வை தொடங்கியுள்ளனர். இதில் தமிழகமும் பங்கேற்றுள்ளது. இதனால் கேரள அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று தமிழகமும், புதிய அணை தான் கட்ட வேண்டும் என கேரளாவும் கூறி வருகின்றன. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அணையின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை குறித்து ஆராய உயர்மட்டக் கமிட்டியை அமைத்துள்ளது உச்சநீதிமன்றம். முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் இதன் தலைவராக உள்ளார்.
அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆய்வுநடத்துமாறு இந்தக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து டெல்லி, த்திய மண் வளம் மற்றும் கனிம வள ஆய்வு ஊழியர்களும், காவிரி தொழில்நுட்பத் துறை முதன்மை பொறியாளர் சந்திரசேகரன், செயற்பொறியாளர் செல்வராஜ், பூண்டி பொதுப்பணித் துறை ஆய்வுப் பிரிவு வல்லுனர்கள் பன்னீர்செல்வம், நிசாம் அலிகான், கனகா, சுமதி ரோஸ் ரீனா ஆகியோரும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து ஹரீஷ்குமார் தலைமையில், நீரில் நீண்ட நேரம் மூழ்கி ஆய்வு செய்ய வல்ல நீச்சல் பயிற்சி பெற்ற ஏழு பேர் கொண்ட குழுவும் அங்கு சென்றுள்ளது. கேரளா சார்பில் நீர் வளத்துறை செயற்பொறியாளர் ஜார்ஜ்டேனியல், அணைக்கட்டு கண்காணிப்புத் துறை உதவி பொறியாளர்களும் பங்கேற்றனர்.
நேற்று முன்தினம் காலை துவங்கிய ஆய்வுப் பணியில், டில்லியில் இருந்து சாலை வழியாகக் கொண்டு வரப் பட்டுள்ள, தொலைதூர இயக்கு கருவி மூலம் அணையின் நீர்மட்டம், அடித்தளம் ஆகியவற்றை ஆய்வு செய்யும் பணிகள் துவங்கின.
இந்த ஆய்வுப் பணிகள் குறித்து கேரள அரசு தரப்பு அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.