நாடார்களுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க காங்.குக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி கோரிக்கை!
சென்னை: நாடார்களுக்கு சென்னையிலும், கொங்கு மண்டலத்திலும் தலா 2 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி ஒதுக்க வேண்டும் என்று திமுகவில் போய்ச் சேர்ந்துள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு நாடார் சமுதாய அமைப்புகள் இணைந்து பெருந்தலைவர் மக்கள் கட்சியை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் தலைவராக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அடுத்த 2 நாட்களிலேயே அதிமுகவை நாடி அங்கு போய் 2 சீட்களைப் பெற்று விட்டார் சரத்குமார்.
அதிர்ச்சி அடைந்த பெருந்தலைவர் மக்கள் கட்சி, சரத்குமாரை பதவியிலிருந்து நீக்கியது. இனி வேறு வழியில்லை என்ற நிலை உருவானதால் திமுகவை நாடி அங்கு கூட்டணி வைத்து, ஒரு சீட் வாங்கியுள்ளனர். அந்த சீட்டில், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலனே போட்டியிடவுள்ளார். இதை அவரே நேற்று அறிவித்தார்.
திமுகவுடன் கூட்டணி வைத்து ஒரு சீட்டை வாங்கிய பின்னர் வெளியே வந்த தனபாலன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.
3500 நாடார் சங்கங்கள் மற்றும் மிக முக்கிய சங்கங்களான மதுரை நாடார் மகாஜன சங்கம், நெல்லை தட்சிணமாற நாடார் சங்கம், நெல்லை- தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து உருவாக்கப்பட்டதுதான் பெருந்தலைவர் மக்கள் கட்சி.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் நாடார், சமுதாய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். நாங்கள் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று தீவிர பிரசாரம் செய்வோம்.
6-வது முறையாக முதலமைச்சர் கருணாநிதி மீண்டும் முதல்வராக ஆவார். எங்கள் கட்சியின் சார்பாக நான் போட்டியிடுகிறேன். தொகுதி பின்னர் அறிவிக்கப்படும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவேன்.
கொங்குமண்டலம், மற்றும் சென்னையில் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்த நாடார்களுக்கு தலா 2 தொகுதிகளை காங்கிரஸ் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்றார் தனபாலன்.












Click it and Unblock the Notifications