பள்ளிகளில் தமிழ்க் கல்விக்கு முன்னுரிமை கொடுக்காத திராவிடக் கட்சிகள்: பாஜக
காரைக்குடி: தமிழகத்தில் நீண்ட காலமாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியே இருப்பதால் பள்ளிகளில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்று பாஜக தேசியக் குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறி்த்து அவர் கூறியதாவது,
கடந்த 1967-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 44 ஆண்டு காலமாக தமிழகத்தை திராவிடக் கட்சிகள் தான் ஆட்சி செய்து வருகின்றன. ஆனாலும் இன்னும் பள்ளிகளில் தமிழ் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், சிபிஎஸ்இ முறைகளில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தமிழே தெரியாமல் மருத்துவராகவோ, பொறியாளராகவோ ஆகலாம் என்கிற நிலைதான் தமிழகத்தில் தொடர் கதையாக உள்ளது.
மத்தியில் திமுக, காங். கூட்டணி ஆட்சி நடக்கும்போதே இலங்கையில் 1 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 25 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட 75 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுவிட்டனர். 15 ஆயிரம் குழந்தைகள் தாய், தந்தையரை இழந்து ஆதரவின்றி நிற்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்றார்.