அதிருப்தியாளர்களை வைத்து மதிமுகவை பிளக்க சதி?
தமிழகம் முழுக்க ஒரு கட்டுக்கோப்புடன் உள்ள அரசியல் அமைப்பு மதிமுக. திமுக, அதிமுகவுக்கு அடுத்து, ஒரு தலைமையின் கீழ், பெரிய கோஷ்டிப் பூசல் இல்லாமல் சீரான நிர்வாக அமைப்பைக் கொண்ட கட்சி என்ற பெயர் மதிமுகவுக்கு உண்டு. கட்சியின் மூத்த தலைகள் சில திமுக பக்கம் உருண்டு ஓடிய போதும்கூட, மதிமுகவின் இந்த கட்டுக்கோப்பு சிதையவில்லை.
ஆனால் வைகோவின் இப்போதைய தேர்தல் புறக்கணிப்பு முடிவு, கட்சிக்குள்ளேயே இருவிதமான கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் கட்சி என்று ஆன பிறகு தேர்தலில் போட்டியிடுவதுதான் தங்கள் இருப்பை வெளிக்காட்டுவதாக அமையும். புறக்கணித்து ஒதுங்கி நின்றால் காணாமல் போகும் அபாயம் உள்ளது என மாவட்டச் செயலாளர்கள் பலரும் கூற ஆரம்பித்துள்ளனர்.
இதையே காரணமாக வைத்து மதிமுகவின் கட்டுக் கோப்பை உடைக்கும் முயற்சியில் சிலர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வைகோ முடிவால் அதிருப்திக்குள்ளாகியிருக்கும் மதிமுகவின் மாவட்டச் செயலாளர்களை தனியாக ஒரு கூட்டம் நடத்த வைக்க சிலர் முயன்று வருகின்றனர்.
இந்தக் கூட்டத்தில் வைகோவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், தாங்களே உண்மையான ம.தி.மு.க. என்று அறிவிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான வேலைகளைச் சிலர் தொடங்கிவிட்டதாகவும், ம.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகளுடன் இவர்கள் தொடர்பிலிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த நகர்வுகள் வைகோவுக்கும் தெரியாமலில்லை. அவர் இதைக் கண்டு அச்சப்படவும் இல்லை. "என்ன நடந்தாலும் கவலையில்லை. கட்சியை இப்போதுதான் புதிதாகத் துவங்கியுள்ளதாக நினைத்துக் கொள்கிறேன். தங்களுக்கான பதவி, பலனை மட்டுமே பெரிதாக நினைப்பவர்களை வைத்துக் கொண்டிருந்தால், நாம் நினைத்த எதுவும் கைகூடாது. தேர்தலுக்குத் தேர்தல், இவர்களின் பதவிப் பசியை போக்க திமுக அல்லது அதிமுகவிடம் கையேந்தும் நிலைதான் கடைசி வரை தொடரும். இன்றைய தலைமுறைக்கு சரியான வழிகாட்டியாகவும் திகழ்வதுதான் எனது லட்சியம் என்று தன்னிடம் சமரசம் பேச வந்த திராவிட இயக்க தலைவர் ஒருவரிடம் நிதானமாகவும் அழுத்தமாகவும் தெரிவித்துள்ளார் வைகோ.
வைகோவின் லட்சிய உறதி, அவரது கட்சியின் நிர்வாகிகளுக்கும் இருக்குமா அல்லது எல் கணேசன், செஞ்சி, கண்ணப்பன் வழியில் ஏதேனும் ஒரு கூட்டணிக்குள் கரைந்து காணாமல் போவார்களா... பார்க்கலாம்!