திருவாரூரில் இன்று கருணாநிதி பிரசாரம் தொடக்கம்-நாளை மனு தாக்கல்
சென்னை: முதல்வர் கருணாநிதி தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். திருவாரூருக்கு அவர் காரிலேயே பயணம் செய்யவுள்ளார். நாளை அவர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.
முதல்முறையாக தனது சொந்த ஊரில் போட்டியிடுகிறார் கருணாநிதி. இன்று திருவாரூரில் தனது தேர்தல் பிரசாரத்தையும் அவர் தொடங்குகிறார். இன்று மாலை திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் முதல்வருடன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
பிரசாரத்திற்காக இன்று காலையில் கார் மூலம் சென்னையிலிருந்து கிளம்பினார் கருணாநிதி. புதுச்சேரி வழியாக அவர் திருவாரூர் செல்கிறார்.
மாலை 6 மணிக்கு தொடங்கும் பொதுக் கூட்டத்தில், கே.வி.தங்கபாலு, டாக்டர் ராமதாஸ், தொல்.திருமாவளவன், கி.வீரமணி, ஆர்.எம்.வீரப்பன், கே.எம்.காதர்மொய்தீன், பெஸ்ட் ராமசாமி, ஸ்ரீதர் வாண்டையார், என்.ஆர்.தனபாலன், பேராயர் எஸ்றா சற்குணம், கு.செல்லமுத்து, எல்.சந்தானம், பொன்.குமார், எம்.பசீர் அகமது, வலசை ரவிச்சந்திரன், லியாகத் அலிகான் ஆகியோரும் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவில் திருவாரூரில் தங்கும் கருணாநிதி நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார்.
நாளை காலை முதலில் காட்டூர் சென்று அங்குள்ள தனது தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் 11 மணியளவில், திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அங்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.
பின்னர் தஞ்சாவூர் செல்லும் கருணாநிதி அங்கு மாலையில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.
அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் முதல்வர் சென்னை திரும்புவார்.












Click it and Unblock the Notifications