வடிவேலு குறித்தெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை-விஜயகாந்த்
வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியத்தில் போட்டியிடுகிறார். நேற்று விழுப்பரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக்ததில் அதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
சூப்பராக இருக்கிறது!
கேள்வி: தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்: சூப்பராக இருக்கிறது. எனக்கு எந்த பயமும் இல்லை.
கேள்வி: நீங்கள் ரிஷிவந்தியம் தொகுதியை ஏன் தேர்வு செய்தீர்கள்?
பதில்: தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்பது தான் எனது விருப்பம். ரிஷிவந்தியம் தொகுதியில் அதுபோன்று தான் போட்டியிடுகிறேன்.
கேள்வி: வடிவேலு உங்களை பற்றி தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியிருக்கிறாரே?
பதில்: அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. மக்கள் என்னை நன்கு அறிவார்கள்.
பாகிஸ்தானுடன் இந்தியா போரிடும்போது...!
கேள்வி: பிரசாரம் எதை முன்நிறுத்தி இருக்கும்?
பதில்: ஒரு போர் என்றால் பாகிஸ்தானுடன் இந்தியா போரிடும்போது வெற்றிக்காக தேவைக்கேற்ப வியூகங்கள் இருக்கும். அதுபோன்று தான் இந்த தேர்தலிலும் இருக்கும்.
கேள்வி: உங்களின் பிரசார வியூகம் எப்படி இருக்கும்?
பதில்: பிரசாரத்தின் போது தான் தெரியும்.
அதை பார்க்காதீர்கள்...!
கேள்வி: ஜெயலலிதாவுடன் இணைந்து ஒரே மேடையில் கூட்டாக பிரசாரம் செய்வீர்களா?
பதில்: இப்போது எப்படி சொல்ல முடியும். நான் என்ன ஜோசியம் படித்திருக்கிறேனா? கணித்து சொல்வதற்கு. அது அந்தந்த நேரத்தில் நடக்கும். பிரசாரம் இணைந்தோ, இல்லையோ அதை பார்க்காதீர்கள். வெற்றியை மட்டும் பாருங்கள். எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி. நிச்சயம் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.