அதிகாரப்பூர்வமற்ற போட்டியில் இருந்து விலகுக: திமுகவினருக்கு கருணாநிதி வேண்டுகோள்
சென்னை: அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ள திமுகவினரை போட்டியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினத்தோடு முடிவடைந்தது. இதில் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகள் என மொத்தம் 4 ஆயிரத்து 280 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில் விந்தை என்னவென்றால் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து அந்தந்த கட்சியினரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் திமுகவினரும் அடக்கம். அவ்வாறு வேட்பாளர்களை எதிர்த்து நிற்கும் கட்சியினரை போட்டியில் இருந்து விலகி மனுக்களை திரும்பப் பெறுமாறு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தலைவர் தந்தை பெரியார், திமுக அரசை வாழ்த்தி வெளியிட்ட செய்தியில் முக்கியமான ஒன்றை கோடிட்டுக்காட்டிச் சொன்னார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பது திமுகவின் முழக்கமாக இருக்கிறது.
என்னைப் பொருத்தவரையில் கடமை, கண்ணியம் ஆகியவற்றில் கழகம் கடைபிடிக்க வேண்டிய உறுதியை விட கட்டுப்பாட்டில் தான் அதிக உறுதி தேவை. கடமை தவறினாலோ, கண்ணியம் தவறினாலோ கழகத்திற்கு சிறிதளவு தான் சேதம் ஏற்படும். ஆனால் கட்டுப்பாடு தவறிவிட்டால் கழகம் முழுவதுமாக சேதமடைந்துவிடும். எனவே, எப்பாடுபட்டாவது கட்டுப்பாட்டைக் காப்பாற்றுங்கள் என்று உறுதிபடச் சொல்வார்.
இந்த தேர்தலில் ஓரிரு இடங்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் சிலர் கழகத்தின் மீதே சேற்றை வாரி இறைப்பதைப் போல் கழகக் கட்டுப்பாட்டை துச்சமெனக் கருதி சுயேட்சைகளாகவோ அல்லது விலகி நின்றோ தேர்தலில் போட்டியிடுவது கண்டு கண்கலங்குகிறேன்.
இவர்களா இப்படி?'' என்று மனம் நொந்து போகின்றேன். என்மீதும், கழகத்தின் மீதும் இதுவரை வைத்திருக்கும் அன்பும், பாசமும் உண்மை என்பதை நிரூபிக்க அந்த உடன்பிறப்புகளுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. அவர்கள் உடனடியாக இந்த அதிகாரப்பூர்வமற்ற போட்டியில் இருந்து விலகிக் கொண்டு கழகத்தின் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் காத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.