காரைக்கால் சனீஸ்வரர் கோயிலில் ராஜாத்தியம்மாள் பரிகாரப் பூஜை
காரைக்கால்: முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள், திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோயிலில் பூஜைகள் செய்து வழிபாடு செய்தார்.
காரைக்கால் திருநள்ளாரில் உள்ளது தர்பாரண்யேஸ்வரர் கோயில். இந்த கோயிலில் சனி பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இதனால் இந்த கோவில் இந்தியாவிலேயே புகழ் மிக்கதாக உள்ளது.
இங்கு சனிப் பெயர்ச்சி காலத்தில் லட்சக்கணக்கிலும், சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.
திருநள்ளார் சனி பகவான் கோயிலில் நேற்று மதியம் 12.10 மணிக்கு தமிழக முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள், சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
முதலில் சொர்ணகணபதியையும், பின்னர் சுப்பிரமணியர், திருமால், தர்பாரண்யேஸ்வரர், பிரணாம்பிகை அம்பாள், சனீஸ்வர பகவானை தரிசித்தார்.
மேலும், முதல்வர் கருணாநிதி பெயரில் சனி பகவானுக்கு தயிராபிஷேகம் மற்றும் பரிகார பூஜைகள் செய்தார். இதைத்தொடர்ந்து எள்தீபம் ஏற்றப்பட்டு, காக்கைக்கு சாதம் அளிக்கப்பட்டது. சாமி தரிசனம் முடித்த ராஜாத்தி அம்மாள் மதியம் 1.10 மணிக்கு காரில் புறப்பட்டு சென்றார்.