குடும்ப ஆட்சியை குறை சொல்ல ஜெ.வுக்கு அருகதை இல்லை: இல.கணேசன்
சென்னை: குடும்ப ஆட்சியைப் பற்றி குறை சொல்ல ஜெயலலிதாவுக்கு எந்த அருகதையும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் சுப்பிரமணியம் அப்பகுதி மக்களின் நலன் கருதி தயாரித்த தேர்தல் அறிக்கையை பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது, தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையம் எடுத்து வரும் நடுநிலையான நடவடிக்கைகளை பாஜக வரவேற்கிறது. இந்த துணிச்சலான கெடுபிடிகள் தேர்தல் முடியும் வரை நீடிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைளுக்கு திமுக மட்டும் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே வாக்குகளைப் பெற மக்களுக்கு பணத்தை லஞ்சமாகக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கியுள்ளன.
வாஜ்பாய் காலத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. திமுக பாணியில் அதிமுகவும் இலவசங்களை நம்பி தேர்தலில் குதித்துள்ளது. இது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல்.
இந்த நிலைமையை மாற்ற தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப ஆட்சியைப் பற்றி குறை சொல்ல ஜெயலலிதாவுக்கு எந்த அருகதையும் இல்லை. ஆட்சிக்கு வந்தால் மன்னார்குடி குடும்பத்தின் தலையீடு இல்லாமல் ஆட்சி நடத்த முடியும் என்று ஜெயலலிதாவால் வாக்குறுதி அளி்கக முடியுமா?.
தமிழகத்தில் மணல் கொள்ளையை அறிமுகப்படுத்தி வைத்ததே அதிமுக ஆட்சியில் தான். கடந்த 2003ம் மணல் கொள்ளையைத் தடுத்த தாசில்தார் படுகொலை செய்யப்பட்டதை மக்கள் மறந்துவிடவில்லை என்றார்.
இலவசங்களால் தமிழக மக்களை ஈர்க்க முடியாது-சுஷ்மா:
இந் நிலையில் பாஜக மூத்த தலைவரான சுஷ்மா சுவராஜ் இன்று சென்னையில் கட்சியின் பிரசார சி.டியை வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு சாதகமான சூழ்நிலை உள்ளது. மக்களிடம் ஆட்சிக்கு எதிரான மனப்போக்கு இருப்பதாக கருதுகிறேன்.இலங்கை தமிழர் பிரச்சனையில் பாஜகவின் செயல்பாட்டால் மக்கள் மத்தியில் எங்கள் மீது நல்ல எண்ணம் உள்ளது.
சட்டமன்றத்திலும் உங்கள் பிரச்சனை பற்றி பேச பாஜகவை ஆதரியுங்கள். இலவச திட்டங்களால் புத்திசாலிகளான தமிழக மக்களை ஈர்க்க முடியாது. ஒரு காலத்தில் நிர்வாகத் திறமைக்கு பெயர் பெற்ற தமிழகத்தில் இப்போது நிர்வாக சீர்குலைவும், ஊழலும் காணப்படுகிறது.
மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கம் திமுகவின் மூத்த அமைச்சர் சிறையில் இருக்கிறார். அவர் மீது 80,000 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். நாங்களும் இந்த தேர்தல் மூலம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் எங்கள் கணக்கை தொடங்குவோம்.
திமுக ஒரு காலத்தில் எங்கள் கூட்டணியில் இடம் பெற்று இருந்தது. கடைசி வரை ஆட்சியில் பங்கு பெற்று விட்டு சந்தர்ப்பவாதத்தால் பிரிந்து சென்றார்கள். கொள்கைரீதியாக விலகி போகவில்லை. அதே போல் தான் அதிமுகவையும் திமுகவையும் நாங்கள் சம தூரத்தில் வைத்துப் பார்க்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications