'ராஜபக்சேவுக்கு இந்தியா மரியாதை தரவில்லை!' - இலங்கை அரசு

இலங்கைத் தமிழ் இணையதளங்களில் இதுகுறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண மும்பை சென்ற ராஜபக்சே, தன்னுடன் வந்திருந்தவர்களுக்கு 30 இருக்கைகளை கேட்டிருந்ததாகவும், அவருக்கு 10 இருக்கைகளே வழங்கப்பட்டதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
போட்டியைக் காணச் சென்ற அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு ஒரு நாட்டின் அதிபர் என்ற வகையில் இந்தியாவில் உரிய மரியாதைகள் கிடைக்கவில்லை என இந்தியாவுக்கான இலங்கைத் தூதரக உயர் அதிகாரி உபெக்கா சமரதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் இலங்கை கிரிக்கெட் அணியை சந்திக்க ராஜபக்சேஅனுமதி கோரியிருந்தபோதும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லையாம். மேலும் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற அணியுடன் புகைப்படம் எடுக்கவும் ராஜபக்சேவுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா சென்ற அதிபர் ராஜபட்ச உரியமுறையில் கவனிக்கப்படாதது குறித்து இந்திய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளதாக இந்தியாவுக்கான தூதர் பிரசாத் காரியவசம் தெரிவித்தார்.
அழையாத விருந்தாளி...
இதற்கிடையே ராஜபக்சேவுக்கு அளிக்கப்பட்ட மரியாதை குறித்து இந்திய அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்திருந்ததனால் அவருக்கு உரிய அரசு மரியாதை அளிக்கப்பட்டதாக இலங்கைக்கு இந்தியா பதிலளித்துள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சே அழைப்பு ஏதுமின்றி தனிப்பட்டரீதியில் இந்தியா வந்ததன் காரணமாகவே அவருக்கு அரசு மரியாதை தரப்படவில்லை என்றும் இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ரத்னாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications