தமிழகத்தில் மாற்றம் ஏற்படுவது காலத்தின் கட்டாயம்-தா.பாண்டியன்
திருநெல்வேலி: தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம், காலத்தின் கட்டாயம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
நெல்லை டவுனில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தா.பாண்டியன் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம். இலங்கை பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து போரை நிறுத்துமாறு வலியுறுத்தினோம். ஆனால் அவர் உள்நாட்டு பிரச்சினையில் இந்தியா தலையிட முடியாது என்றார். இந்த பிரச்சனைக்கெல்லாம் தி.மு.க. அமைச்சர்கள் விலகுவார்கள் என்று கருணாநிதி அறிவிக்க வில்லை.
இலவச கலர் டி.வி.க்காக 2230 கோடி செலவு செய்துள்ளனர். இவையனைத்தும் மக்கள் வரிப்பணம் தான். ஆனால் கேபிள் டி.வி. இணைப்புகள் மூலம் மாதந்தோறும் ரூ.400 கோடி பெறுகின்றனர். 1 வருடத்துக்கு ரூ.4800 கோடி கிடைக்கிறது.
சட்டமன்ற தேர்தலுக்குபின்னர் இந்த நிலை மாறிவிடும். திருச்சியில் இருந்து கரூர் இடையே தினமும் 8 ஆயிரம் லோடு மணல் அள்ளப்படுகிறது.
இது தவிர தாமிரபரணி, பாலாறு, வைகை ஆறுகளிலும் மணல் அள்ளப்படுகிறது. நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு நடந்துள்ளது. இவற்றையெல்லாம் தகவல் உரிமை சட்டத்தில் கேட்டறிந்து விவரங்களை சேகரித்து வைத்துள்ளோம். தேர்தலுக்கு பின்னர் இவற்றை வழக்காக தொடுக்க தயாராக உள்ளோம்.
எந்த மாநிலத்திலும் முதலமைச்சரின் மனைவி, பேரன்கள் பற்றி யாரும் பேசியதில்லை. இங்குதான் பேச வேண்டியுள்ளது. தங்கள் குடும்பத்தை காப்பாற்றும் இயக்கமாக தி.மு.க.வை மாற்றி விட்டார்கள். தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா மீது வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 80 ஆயிரம் பக்கத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.2-வது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படும் என்கிறார்கள்.
கருணாநிதி தி.மு.க. தேர்தல் அறிக்கையை கதாநாயகி என்கிறார். இதனால் கதாநாயகன் ராசா மீதான குற்றபத்திரிகைதான். இந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி உடன்கட்டை ஏறும் நிலை ஏற்படும். மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்பது அவர்களது கனவுதான். தமிழகத்தில் நல்லாட்சி மலர அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றார் தா.பாண்டியன்.












Click it and Unblock the Notifications