சேரன்மகாதேவி, பாளையில் வாக்காளர் அட்டை இருந்தும் வாக்களிக்க முடியாத பெண்கள்
நெல்லை: சேரன்மகாதேவி, பாளையில் உள்ள வாக்குசாவடிகளில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் பெண்கள் வாக்களிக்க முடியாமல் திரும்பினர்.
பாளை குழந்தை ஏசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பாளை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிகளில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. பாளை தொகுதிக்குட்பட்ட பெண்கள் சிலர் வாக்காளர் அடையாள அட்டையோடு வாக்களிக்க வந்தனர். தேர்தல் அலுவலரிடம் அவர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்தபோது அலுவலர் பாகம் எண், வரிசை எண் போன்றவற்றை அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் தெரியாது என சொல்ல பாகம் எண், வரிசை எண் இருந்தால் தான் வாக்களிக்க முடியும் என்று கூறினார்.
பூத் சிலிப் வாங்காததால் அவர்களிடம் மேற்கண்ட விபரங்கள் இல்லை. ஆனால் பூத் சிலிப் கிடைக்காதவர்கள் இன்று வாக்குச்சாவடியில் உள்ள சிறப்பு மையங்களில் பூத் சிலிப் பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இன்று வாக்குச்சாவடிகளில் பூத் சிலிப் வழங்கும் அதிகாரிகளும் வக்காளர்களிடம் பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றை தெரிவித்தபிறகே பூத் சிலிப்புகளை வழங்கினர். பாகம் எண், வரிசை எண் பெரும்பாலான வாக்காளர்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லாததால் பூத் சிலிப் பெற முடியவில்லை. இதனால் ஏராளமான வாக்காளர்கள் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க முடியாமல் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
இயந்திர பழுதால் காத்திருந்த அதிமுக வேட்பாளர்
தூத்துக்குடி டூவிபுரம் டிஎன்டிடிஏ நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக வேட்பாளர் சித.செல்லப்பாண்டியன் உள்பட வாக்காளர்கள் காலை 8 மணிக்கு முன்பே வரிசையில் காத்திருந்தனர். ஆனால் வாக்குப்பதிவு இயந்திரம வேலை செய்யவில்லை. அதற்கான பணியாளர்களை கொண்டு சரிபார்த்து பின் 8-30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்பின் சித. செல்லப்பாண்டியன் வாக்களித்தார். காலை பெண்களை விட ஆண்களே அதிக அளவில் காணப்பட்டனர்.
திருச்செந்தூரில் மை அழிந்தது
திருச்செந்தூர் செந்திலாண்டவர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. வாக்காளர்களுக்கு விரலில் வைக்கப்பட்ட மை உடனே அழிந்து விட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மை அழிந்ததால் கள்ள ஓட்டு போட்டக்கூடும் என்று மக்கள் அஞ்சினர்.
திமுக-அதிமுக வேட்பாளர்கள் நேருக்கு நேர்
அம்பை தொகுதி அதி்முக வேட்பாளர் இசக்கி சுப்பையா, தனது மனைவி மீனாட்சியுடன் பிராஞ்சேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 9 மணிக்கு ஓட்டு போட்டார். அவர் வெளியே வந்தபோது தற்செயலாக திமுக வேட்பாளர் ஆவுடையப்பனும் அங்கு வந்தார். இரு வேட்பாளர்களும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர். அப்போது அவர்கள் வணக்கம் சொல்லினர். ஆவுடையப்பனுக்கு அங்கு ஓட்டு இல்லாவிட்டாலும், அவர் வாக்குச்சாவடியை பார்க்க வந்திருந்தார்.
இதற்கிடையே அதி்முக வேட்பாளருடன் வாக்குச்சாவடிக்கு சிலர் வந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களிடம் வாக்கு வாதம் செய்தனர். போலீசாரிடம் இசக்கி சுப்பையா, அவர்கள் இதே ஊரை சேர்ந்தவர்கள்தான் அவர்களும் ஓட்டு போடதான் வந்துள்ளனர் என்று எடுத்து கூறினார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications