கர்நாடகா: 64 சட்டவிரோத சுரங்கங்களை மூட சிபாரிசு!!
பெங்களூர்: பெல்லாரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கும் 64 சுரங்கங்களை மூட உத்தரவிடும்படி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் மத்திய அதிகார குழு சிபாரிசு செய்து உள்ளது.
சமாஜ் பரிவர்த்தன் சமுதாயா என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது.
இதற்கான மனுவில், "கர்நாடகத்தில் குறிப்பாக பெல்லாரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் சுரங்க நிறுவனங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய லோக் அயுக்தா அமைப்பு, அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில், பல்வேறு சுரங்க நிறுவனங்கள் சட்டவிரோதமாக மட்டும் அல்லாமல் வன நிலங்களை ஆக்கிரமித்து இருப்பதும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சுரங்க நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வகையில் கர்நாடகத்தில் 1,114.8 ஏக்கர் வனநிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே இதுவிஷயத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு, சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டுள்ள சுரங்க நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்," என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய அதிகார குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டனர். 6 வாரங்களில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, மத்திய அதிகார குழுவினர் கர்நாடகம் வந்தனர். அவர்கள் பெல்லாரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கும் சுரங்க நிறுவனங்கள் குறித்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். இதேபோல ஆந்திர மாநிலத்திலும் ரெட்டி சகோதரர்களுக்கு சொந்தமான சுரங்க நிறுவனங்களில் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, மத்திய அதிகார குழுவினர் நேற்று தங்கள் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கை சுமார் 1,000 பக்கங்களை கொண்டதாக உள்ளது.
64 சுரங்கங்களை மூட சிபாரிசு
அறிக்கையில், 'பெல்லாரி மாவட்டத்தில் அதிகாரிகளை சரிக்கட்டியும், மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவுடனும் பெருமளவுக்கு சட்டவிரோத சுரங்க பணிகள் நடந்து வருகின்றன. மேலும் 2003 முதல் 2010-ம் ஆண்டு வரை முறையான அனுமதி இல்லாமல் 304.91 லட்சம் மெட்ரிக் டன் இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எனவே சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ள 64 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து அவற்றை மூட உத்தரவிட வேண்டும்' என்று சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கை மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், மத்திய அதிகார குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து பதில் அளிக்கும்படி கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.