ஆவின் பால் பண்ணையில் பெரும் தீ... பால் பவுடர் மூட்டைகள் எரிந்தன!
சென்னை: சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால்பண்ணையில் இன்று அதிகாலை பெரும் தீ விபத்து நேர்ந்தது. இதில் பால் பவுடர் மூட்டைகள் எரிந்து நாசமாகின.
இங்குதான், வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படும் பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சப்ளை செய்யப்பகிறது.
தினமும் 3.5 லட்சம் லிட்டர் பால் இங்கிருந்து வினியோகிக்கப்படுகிறது. இதேபோல் இங்கு பால் பவுடர், வெண்ணை உள்ளிட்ட பால் பொருட்களும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக சப்ளை செய்யப்படுகிறது.
பால் பண்ணையின் பின்புறம் பால் பவுடர் மூட்டைகளை சேமித்து வைக்கும் குடோன் உள்ளது. இங்கு பாலிதீன் கவர்களும், நிறைய அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இன்று பால் வினியோகம் முடிந்த பிறகு அதிகாலை 3 மணி அளவில் பால் பவுடர் குடோனில் திடீரென தீப் பிடித்து கொண்டது. அந்த அறைக்கு வெளியே கிடந்த பாலிதீன் கவர்கள் அட்டைகளில் பிடித்த தீ மளமளவென குடோனுக்குள் பரவியது.
இதை பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். பிளாஸ்டிக்கில் தீ பிடித்ததால் அவர்களால் எளிதில் அணைக்க முடியவில்லை. உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.அவர்கள் வருவதற்குள் தீ மளமளவென பால் பவுடர் குடோன் முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது.
கீழ் தளத்திலும், முதல் மாடியிலும் தீ எரிந்து கொண்டிருந்த நிலையில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் உடனடியாக தீயை கட்டுக்குள் வரவில்லை.
இதனால் திருவான்மியூர், ராஜ்பவன், மறைமலைநகர், அசோக் நகர், சிறுசேரி சிப்காட் உள்பட பல பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ மற்ற கட்டிடங்களுக்கு பரவாத வகையில் பக்கத்து அறையில் இருந்த பால் பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ எரிந்த குடோனில் பிளாஸ்டிக் பைகள் நிறைய கிடந்ததால் வேகமாக எரிந்தது.
சுமார் 7 மணி நேரம் போராடி காலை 10 மணிக்குதான் தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஏராளமான பால் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானதுடன் அந்த கட்டிடமே முற்றிலும் சேதமடைந்து விட்டது. பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகி விட்டதாக அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்தனர்.
தீப்பிடித்த இடத்திற்கு அருகே ஜெனரேட்டர் மற்றும் டீசல், ஆயில் டேங்க் இருந்தது. இதையும் அங்கிருந்து அப்புறப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்தால் பால் சப்ளையில் பாதிப்பு இருக்காது என்றும், நாளை வழக்கம்போல பால் விநியோகிக்கப்படும் என்றும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications