நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு. சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் பொன்னுசாமியின் மகன் இவர்.
1996ல், சக மாணவர் ஜான் டேவிட்டால் கொடூரமாக கொல்லப்பட்டார் நாவரசு. இந்த வழக்கில் கடலூர் நீதிமன்றத்தில் ஜான் டேவிட்டிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜான் டேவிட் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததன் பேரில், விடுதலை செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதில், தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஜான் டேவிட்டுக்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. மேலும் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சரியாக ஆராயவில்லை என்றும் கண்டித்தது.
இதற்கிடையே, ஜான் டேவிட் பாதிரியாராக வெளிநாட்டில் பணியாற்றுவதாகக் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஜான் டேவிட்டை கைது செய்ய கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் சிதம்பரம் போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கரூருக்கு விரைந்தனர்...
இதில் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், தலைமை போலீசார் ரவி, வேல்முருகன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ஜான்டேவிட்டின் சொந்த ஊரான கரூரை அடுத்த வெங்கமேட்டிற்கு வந்தனர். பின்னர் வெங்கமேட்டில் ஜான் டேவிட் வீட்டுக்குச் சென்றனர். ஆனால் ஜான்டேவிட்டின் தந்தை டாக்டர் டேவிட் மாரிமுத்து, தாய் டாக்டர் எஸ்தரின் லட்சுமி ஆகிய 2 பேரும் வீட்டில் இல்லை. வீடு பூட்டப்பட்டிருந்தது.
அவர்களுடைய வீட்டின் கீழ் தளத்தை பி.எஸ்.என்.எல்.அலுவலகத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் பி.எஸ்.என்.எல். ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
இன்ஸ்பெக்டர் ராமநாதன், சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் எட்டு போலீசார் அடங்கிய தனிப்படையினர் சென்னையில் ஜான் டேவிட் தாயார் தங்கியிருந்த இடத்தில் விசாரணை நடத்தினர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தேடப்பட்டு வந்த கொலையாளி ஜான் டேவிட் சரணடைந்தார்.
கடலூர் மத்திய சிறையில் அவர் தாமாக முன்வந்து சரணடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications