ஏர் இந்தியா விமானிகள் ஸ்டிரைக் நீடிக்கிறது-பயணிகள் கடும் அவதி
டெல்லி: ஏர் இந்தியாவின் பைலட்டுகள் ஸ்டிரைக் இன்று 5வது நாளாக தொடர்ந்து நீடித்தது. இதனால் ஏர் இந்தியாவின் 90 சதவீத விமானங்கள் இன்று ஓடவில்லை. இதையடுத்து பயணிகள் அவதி மேலும் அதிகரித்துள்ளது.
800 ஏர் இந்தியா விமானிகள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
தங்களது நிலையில் விமானிகள் உறுதியாக உள்ளதால் பிரச்சினை வலுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று வேலைநிறுத்தம் 5வது நாளை எட்டியது.
இதனால் 90 சதவீத ஏர் இந்தியா விமானங்கள் ஓடவில்லை. பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பல்வேறு மாற்றுத் திட்டங்களை நாங்கள் தொடர்ந்து வருகிறோம். நாடு முழுவதும் இன்று 40 விமான சேவைகளுக்குத் திட்டமிட்டுள்ளோம். சில பகுதிகளில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின், போயிங் 737 ரக விமானங்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
ஏர் இந்தியா விமானிகளின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நாட்டின் அனைத்து முக்கிய விமான நிலையங்களிலும் பயணிகள் முடங்கிப் போயுள்ளனர்.
இதற்கிடையே, விமானிகளின் ஸ்டிரைக் குறித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் வயலார் ரவி விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், மொத்தம் 1600 விமானிகள் உள்ளனர். இவர்கள் ஆண்டுக்கு ரூ. 800 கோடி அளவுக்கு சம்பாதிக்கின்றனர். இவர்களில் பலர் வெறும் பிளஸ்டூ படித்தவர்கள்தான். பட்டதாரிகள் கூட கிடையாது. இவர்களுக்கு மாதம் ரூ. 3.8 லட்சம் வரை சம்பளமாக கிடைக்கிறது. இவர்கள் என்ன பட்டினியில், பஞ்சத்திலா அடிபட்டுள்ளார்கள் என்று ஆத்திரத்துடன் கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications