அதிமுகவுடன் கூட்டணி: தேமுதிகவுக்கு குறைந்த வாக்குகளே கிடைக்கும்-பாஜக
திருவாரூர்: கடந்த தேர்தல்களில் திமுக, அதிமுக மீதான அதிருப்தி வாக்குகளே தேமுதிகவுக்கு கிடைத்தன. இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து கொண்டதால், முந்தைய தேர்தல்களில் கிடைத்த வாக்குகளை தற்போது தேமுதிக பெற முடியாது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினர்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமானதற்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளே காரணம். இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பதைவிட தேர்தல் கமிஷன் வெற்றி பெற்றுள்ளது என்பதை அறியமுடிகிறது.
கடந்த நாடாராளுமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு கிடைத்த வாக்குகள் இந்த சட்டசபை தேர்தலில் தேமுதிகவுக்கு கிடைக்காது. காரணம், கடந்த தேர்தல்களில் திமுக, அதிமுக மீதான அதிருப்தி வாக்குகளே தேமுதிகவுக்கு கிடைத்தன. இந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து கொண்டதால், முந்தைய தேர்தல்களில் கிடைத்த வாக்குகளை தற்போது தேமுதிக பெற முடியாது.
திமுக, அதிமுக மீதான அதிருப்தி வாக்குகள் பாஜகவுக்கே அதிகமாக கிடைக்கும். பல்வேறு பகுதிகளில், பாஜக பெற்ற வாக்குகளே வெற்றி தோல்வியை நிர்ணயிக்க கூடியதாக இருக்கும். தமிழகத்தில் பாஜக இந்த முறை அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார்.
சாய்பாபா மறைவுக்கு கரூர் பாஜக இரங்கல்:
புட்டர்பத்தி சத்திய சாய்பாபா மறைவுக்கு கரூர் ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் புட்டர்பத்தி சத்திய சாய்பாபா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு கரூர் ஒன்றிய தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட தலைவரும், கரூர் தொகுதி பாஜக வேட்பாளருமான சிவமணி, மாநில மகளிர் அணி செயலாளர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது, சத்திய சாய்பாபாவின் உருவபடத்திற்கு அனைவரும் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சாய்பாபாவின் ஆன்மீக அன்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications