இஸ்ரேலியப் பெண்ணைக் கொன்று பிரிட்ஜில் வைத்த யோகா ஆசிரியர் கைது
பெங்களூர்: தன்னிடம் யோகா கற்று வந்த இஸ்ரேல் பெண்ணைக் கொன்று அவரை குளிர்சாதனப் பெட்டியில் 18 நாட்களாக மறைத்து வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மின்வெட்டு காரணமாக குளிர்சாதனப் பெட்டி செயல்படாமல், பிண வாடை வீசியதைத் தொடர்ந்து அவர் சிக்கினார். அழுகிய நிலையில் இருந்த இஸ்ரேலியப் பெண்ணின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் அந்த யோகா ஆசிரியரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பெண்ணின் பெயர் தமாரா பர்ஹா ஆப்ரகாம். 28 வயதான அவர் சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்திருந்தார். பெங்களூரில் தங்கி லோகேஷ் சந்திர தாஸ் என்ற 31 வயது பி.டெக் பட்டதாரியான யோகா ஆசிரியரிடம் யோகா கற்று வந்தார்.
தமாரா கடந்த 2007ம் ஆண்டு ரிஷிகேஷ் வந்தார். அப்போது அவர் லோகேஷை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இந்த நிலையில் லோகேஷுக்கும், ஜோதி என்பவருக்கும் இடையே அதே ஆண்டு் டிசம்பர் மாதம் கல்யாணம் நடந்துள்ளது.
இதற்கிடையே கடந்த மார்ச் 15ம் தேதி தமரா பெங்களூர் வந்தார். அவரை தனது கர்ப்பிணி மனைவி ஜோதியிடம், தோழி என்று கூறி அறிமுகப்படுத்தி வைத்தார் தாஸ். தனது வீட்டிலேயே தங்கவும் வைத்துள்ளார்.
ஆனால் ஜோதிக்கு, தமரா-தாஸ் உறவில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதேபோல ஜோதி மீது தமராவுக்கு பொறாமை வந்துள்ளது.
இந்த நிலையில் ஏப்ரல் 15ம் தேதி ஜோதி வீட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உள்ளே புகுந்த தமரா, ஜோதி மீது கொதிக்கும் நீரை ஊற்றியுள்ளார். இதையடுத்து விரைந்து வந்த லோகேஷ் தமராவைத் தடுத்து ஜோதியைக் காப்பாற்றி அடுத்த அறைக்கு அனுப்பியுள்ளார். தமராவை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால் தமரா கடும் கோபத்துடன் வாதிட்டுள்ளார். இதனால் கோபமடைந்த தாஸ், வீட்டில் இருந்த பிவிசி குழாயை எடுத்து ஓங்கி தமரா தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயமடந்த தமரா சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து ஏப்ரல் 16ம் தேதி ஒரு வணிக வளாகத்திற்குச் சென்று புதிதாக ஒரு டபுள் டோர் பிரிட்ஜை வாங்கியுள்ளார் தாஸ். அது ஏப்ரல் 17ம் தேதி தாஸ் வீட்டுக்கு வந்துள்ளது. இதுகுறித்து அவரது மனைவி கேட்டபோது, ஆயுர்வேத மருந்துகளை அதில் வைக்கப் போவதாக கூறியுள்ளார் தாஸ். ஆனால் தமராவின் உடலை துண்டு துண்டாக வெட்டி அதை அந்த புதிய பிரிட்ஜில் போட்டு வைத்தார் தாஸ்.
ஆனால் அவரது திட்டம் விரைவிலேயே அம்பலமாகி விட்டது. அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டதால் குளிர்சாதனப் பெட்டி சரியாக செயல்படாமல் வாடை வீசி அக்கம் பக்கத்தினரை உஷார்படுத்தி போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் வந்து விசாரணை நடத்தி சோதனையிட்டபோது குட்டு வெளிப்பட்டு தாஸ் சிக்கிக் கொண்டார்.
இந்தக் கொலை தொடர்பாக தமராவின் பெற்றோருக்குத் தகவல் போயுள்ளது. அதேபோல டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம், மும்பையில் உள்ள துணைத் தூதரகத்திற்கும் தகவல் போயுள்ளது.












Click it and Unblock the Notifications