நெருப்பாய் தகிக்கும் வெயில்... வெறுப்பைக் கிளப்பும் பவர் கட்!!

குறிப்பாக சென்னை, வேலூர் போன்ற வட மாவட்டங்களில் நெருப்பாய் தகிக்கிறது வெயில். அதற்கேற்ப கிராமப் பகுதிகளில் குறைந்தபட்சம் 5 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதால் உச்சகட்ட வெறுப்பில் உள்ளனர் மக்கள்.
வெயிலுக்குப் புகழ்பெற்ற வேலூருக்கு இன்னொரு பெயர் 'வெயிலூர்'!
கோடை காலத்தின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. முதல் நாளே 105.1 டிகிரி வெயில் அளவு வேலூரில் பதிவானது. 2-வது நாள் 106 டிகிரி வெயில் அடித்தது. 3-வது நாளான நேற்று 108 டிகிரி கொளுத்தியது. இன்றும் 108 டிகிரி வெயில் தொடர்கிறது.
நேற்றும் இன்றும் இங்கு 108 டிகிரியைத் தாண்டியது வெயிலின் அளவு. தார்ச் சாலைகள் உருகி நெளியும் அளவுக்கு இங்கு வெயில் உக்கிரம் காட்டி வருகிறது. இதனால் சாலையில் மக்களால் நடமாடவும் முடியவில்லை. சாலைகள் வெறிச்சோடிவிட்டன. கடைகளில் வியாபாரம் டல்லடித்தது. ஏசி ஷோரூம்களைவிட்டு வெளியேற மனமின்றி தயங்கியடி நின்றனர் மக்கள்.
இளநீர், தர்பூசனி, நுங்கு, மோர் மற்றும் குளிர்பான கடைகளில் மட்டும் கூட்டம் அலைமோதியது.
திருச்சி, நெல்லை, சென்னை போன்ற இடங்களிலும் கடுமையாகக் கொளுத்தியது வெளியில். சென்னையில் நேற்று 106 டிகிரியும், இன்று 105 டிகிரியும் வெயிலடித்தது.
மணிக்கணக்கில் பவர் கட்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்வதால் 700 மெ வா அளவுக்கு மின்சாரம் சேமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மின் வெட்டு தொடர்கிறது. வேலூர் போன்ற மாவட்டங்களில் கிராமப்புறங்களில் 6 மணி நேரம் வரை கூட மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. சென்னையில் பராமரிப்பு என்று காரணம் கூறி குறிப்பிட்ட மண்டலங்களில் 8 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதும் நடக்கிறது.
ஒரு பக்கம் வெயில் கொடுமை, மறுபக்கம் மின்சாரம் துண்டிப்பு என இரட்டை அக்னி நட்சத்திர எஃபெக்டில் தவிக்கிறது தமிழகம்!












Click it and Unblock the Notifications