மணல் கொள்ளையில் மோதல்-அதிமுக பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதில் ஏற்பட்ட மோதலில் அதிமுக பிரமுகர் வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திமுக பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை குன்றத்தூர் அருகே உள்ள காலடிப்பேட்டையைச் சேர்ந்த மதன்ராஜ் (33) அதிமுகவில் எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றியச் செயலாளராகவும் இளைஞரணி செயலாளராகவும் இருந்து வந்தார்.
நேற்று மாலை 6 மணியளவில் காலடிப்பேட்டை பஸ் நிலையம் அருகே சென்ற இவரை காரில் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல் வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.
இதையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் அப்பகுதியில் உள்ள சுறா பாபு என்பவரது குடிசை வீட்டை மதன்ராஜின் ஆதரவாளர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதில் வீடு எரிந்து போனது. ஆனாலும் இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்படவில்லை.
இந் நிலையில் மதன்ராஜின் தாயும் அ.தி.மு.க. ஊராட்சி மன்றச் செயலாளருமான ரஞ்சிதம், அதிமுகவினர் சுமார் 500 பேர் இன்று காலை குன்றத்தூர்- பல்லாவரம் சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து கலைந்து சென்ற அவர்கள் குன்றத்தூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கொலையாளிகளை கைது செய்யக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தக் கொலையால் குன்றத்தூர், காலடிப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பதட்டமான நிலை உள்ளதால் அப்பகுதியில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதில் மதன்ராஜ் தரப்புக்கும் திமுகவைச் சேர்ந்த வைரம் என்பவருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.
இந் நிலையில் மதன்ராஜின் தந்தை அன்பு கடந்த 2003ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதில் வைரம் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
தந்தையை கொலை செய்த கும்பலை பழி வாங்க மதன்ராஜ் முயற்சி செய்து வந்ததாகத் தெரிகிறது. கடந்த 2007ம் ஆண்டு வைரத்தின் அண்ணன் அரிகிருஷ்ணனை ஒரு கும்பல் வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சித்தது. ஆனால், அவர் தப்பிவிட்டார்.
அந்த வழக்கில் மதன்ராஜை போலீசார் கைது செய்தனர். எனவே மதன்ராஜ் தரப்புக்கும்- வைரம், அரிகிருஷ்ணன் தரப்புக்கும் இடையே நீண்ட காலமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந் நிலையில்தான் மதன்ராஜ் வெடிகுண்டுகளை வீசி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதா கண்டனம்:
இந் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம், குன்றத்தூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளரும், காலடிப்பேட்டை கிளைக் கழக செயலாளருமான மதன்ராஜ் முன் விரோதம் காரணமாக தி.மு.கவினர் மற்றும் சமூக விரோதிகளால் வெடிகுண்டு வீசி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
இந்தக் கொடூர செய லுக்கு காரணமான தி.மு.கவினர் மற்றும் சமூக விரோதிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையினரை கேட்டுக் கொள்கிறேன். அன்புச் சகோதரர் மதன்ராஜை இழந்து வாடும் அவரது கடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications