சென்னை திரும்பிய கனிமொழியிடம் ஐடி அதிகாரிகள் விசாரணை
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டில் ஆஜராகுமாறு கனிமொழிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் ஆஜரானார். அப்போது முன்ஜாமீன் கோரி அவர் மனு தாக்கலும் செய்தார்.
அதை விசாரித்த சிபிஐ கோர்ட், மே 14ம் தேதி தீர்ப்பு அளிப்பதாக கூறியுள்ளது. அதுவரை தினசரி கனிமொழி கோர்ட்டில் ஆஜராகுமாறு அது உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தினசரி கோர்ட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார் கனிமொழி.
இந்த நிலையில் வருமானவரித்துறை விசாரணைக்கு வருமாறு தனக்கு உத்தரவிடப்பட்டிருப்பதால் 12 மற்றும் 13 ஆகிய இரு நாட்கள் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியிருந்தார் கனிமொழி.
அதை ஏற்று சிபிஐ கோர்ட் அவருக்கு 2 நாட்கள் விலக்கு அளித்தது. இதைத் தொடர்ந்து இன்று அவர் டெல்லியிலிருந்து சென்னை திரும்பினார். அதைத் தொடர்ந்து அவர் வருமான வரி அலுவலகத்திற்குச் சென்று அங்கு புலனாய்வுத்துறை துணை இயக்குநர் ராமகிருஷ்ண பாண்டே முன்பு ஆஜரானார்.
அவரிடம், 2004ம் ஆண்டு முதல் வருமான வரி கணக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நிறுவன முதலீடுகள், வாங்கியுள்ள பங்குகள் அனைத்து குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.