புதுவை முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி

புதுச்சேரியில் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியை 3 மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்தார் ரங்கசாமி.அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த அவர் முதல் தேர்தலிலேயே அமோக வெற்றியைப் பெற்றார்.
ரங்கசாமி கட்சி-அதிமுக கூட்டணிக்கு 20 இடங்கள் கிடைத்தன. 9 இடங்கள் மட்டுமே திமுக கூட்டணிக்குக் கிடைத்தது. நிரவிப்பட்டனத்தில் சுயேச்சை வேட்பாளர் சிவக்குமார் வெற்றி பெற்றார். இவர் தற்போது என்.ஆர்.காங்கிரஸுக்கு ஆதரவாக திரும்பியுள்ளார்.
இதையடுத்து என்.ஆர். காங்கிரஸ் கட்சி புதுவையில் தனித்து ஆட்சியமைத்துள்ளது. ரங்கசாமி முதல்வராக பதவியேற்றார்.
இன்று பிற்பகல் 12.15 மணியளவில் ரங்கசாமி பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைச்சர்கள் பட்டியலை தயார் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பிற்பகலில் பதவியேற்பு விழா நடந்தது.
ரங்கசாமிக்கும், அமைச்சர்களுக்கும் துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். ரங்கசாமி தற்போது மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார்.
இந்த விழாவில் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் வைத்திலிங்கம், ஜானகிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications