கருணாநிதி குறித்த குறிப்புகளை நீக்குவதற்காக சமச்சீர் கல்வி பாடப் புத்தகம் வினியோகம் நிறுத்தம்

தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகளில் ஒரு பாடத் திட்டமும், மெட்ரிகுலேசன் பள்ளிகளில் மற்றொரு பாடத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த பாடத் திட்டங்களை ஒருங்கிணைந்து அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஓரே மாதிரியான கல்வி கிடைக்கும் வகையில் சமச்சீர் கல்வியை கடந்தாண்டு திமுக அரசு அமுல்படுத்தியது.
முதல் கட்டமாக 1ம் வகுப்பு, 6ம் வகுப்புகளுக்கு மட்டும் கடந்தாண்டு சமச்சீர் கல்வி பாடத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது.
ஆனால், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்துக்கு மெட்ரிக் பள்ளிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பல பளளிகள் மத்திய அரசின் சிபிஎஸ்ஐ பாடத் திட்டத்திற்கு மாற திட்டமிட்டன. ஒரு சில பள்ளிகள் இதற்காக விண்ணபித்தன. இந்த எதிர்ப்பையும் மீறி சமச்சீர் கல்வியை அமுல்படு்த்துவதில் திமுக அரசு உறுதியாக இருந்தது.
இதைத் தொடர்ந்து 10ம் வகுப்பு வரை (1, 6ம் வகுப்பு தவிர) தமிழகம் முழுவதற்கும் தேவையான சமச்சீர் பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
சுமார் 3.5 கோடி இலவசப் புத்தகங்கள் 65 கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மெட்ரிக் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக 1 கோடி புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தப் புத்தகங்கள் கல்வி மாவட்டம் வாரியாக பிரிக்கப்பட்ட கடந்த 12ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தன. புத்தகங்களை பள்ளிகளுக்கு பிரித்து வழங்க மாவட்ட கல்வி அலுவலகங்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவகலங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சமச்சீர் கல்வி பாடப் புததகங்கள் வினியோகத்தை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் சென்னையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டம் நடந்தது. அதில் அரசிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை பளளிகளுக்கு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வினியோகம் செய்யக் கூடாது என்ற வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி தமிழ்ப் பாடப் புத்தகங்களில் கருணாநிதியின் செம்மொழி பாடலும், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள், பிசிராந்தையார் பாடலுக்கு அவர் எழுதிய விளக்கம் உள்ளிட்ட பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றை நீக்க அதிமுக அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக சி.வி.சண்முகம் பொறுப்பேற்ற முதல் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து இந்தப் புத்தகங்கள் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications