பிரதமர் அளிக்கும் விருந்தில் டி.ஆர்.பாலு மட்டும் பங்கேற்பார்-கருணாநிதி

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2வது முறையாக பதவிக்கு வந்து இன்றுடன் 2 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஊழல் மலிந்து போய் கிடக்கும் இந்த நேரத்தில், அதையெல்லாம் மறக்கும் வகையில், தடபுடல் விருந்து நிகழ்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
இன்று மாலை இந்த விருந்து உபச்சாரம் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள்கலந்து கொள்ளவுள்ளனர். இதில் கலந்து கொள்ளுமாறு திமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் டி.ஆர்.பாலு கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக இதில் பங்கேற்காது என்று பின்னர் செய்திகள் வெளியாகின.
கனிமொழி கைது நடவடிக்கையால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் திமுக தலைவர் கருணாநிதி மீளவில்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்தடுத்து திமுகவைக் குறி வைத்து சட்ட நடவடிக்கைகள் வலுத்து வருவதால் திமுக கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
மேலும் அதிமுகவிடம் பட்ட பெரும் தோல்வி தந்த அதிர்ச்சியும் இன்னும் திமுகவை விட்டு விலகவில்லை.
இதை விட முக்கியமாக சட்டசபைத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்தி டீ பார்ட்டிக்கு வருமாறு அழைத்ததை திமுக பெரும் அவமானமாக கருதுகிறது.
எனவே இப்படி அடுக்கடுக்காக தங்களுக்கு தர்மசங்கடத்தைக் கொடுத்து வரும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியின் ஆண்டு விழாவுக்கு போவதற்கு திமுக விருப்பம் இல்லை என்றும் கூறப்பட்டது.
டெல்லி விழாவில் பங்கேற்பதற்காக அங்கு முகாமிட்டுள்ள திமுக எம்.பிக்களை சென்னைக்கு வருமாறு கட்சி மேலிடம் அழைத்துள்ளதாக ஒரு தகவல் கூறியது.
மேலும் இந்த புறக்கணிப்பின் மூலம் தனது எதிர்ப்பை காங்கிரஸுக்குப் புரிய வைக்க திமுக முயற்சிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் தற்போது இந்த விருந்து நிகழ்ச்சியில் திமுக பங்கேற்க முடிவு செய்துள்ளது. அதாவது சம்பிரதாயத்திற்காக ஒரே ஒருவரை அனுப்பி வைக்கிறது திமுக.
இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி கூறுகையில், அடையாளமாக ஒருவரை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளது திமுக. நாடாளுமன்ற தலைவர் டி.ஆர்.பாலு மட்டும் இதில் பங்கேற்பார். வேறு யாரும் பங்கேற்க மாட்டார்கள்.
நான் நாளை டெல்லி செல்கிறார். எனது மகள் கனிமொழியை சந்திக்கப் போகிறேன். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காது என்று கருதுகிறேன்.
நீங்கள் நினைப்பது போல திமுக, காங்கிரஸ் கூட்டணியின் நிலை இப்போது இல்லை என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications