தலித் மக்களின் நடைபாதையை மறித்து தீண்டாமைச் சுவர்: சிபிஎம் கடும் கண்டனம்
விருதுநகர்: விருதுநகர் அருகே உள்ள வ.புதுப்பட்டியில் தலித் மக்கள் நடைபாதையை மறித்து சுவர் கட்டப்பட்டுள்ளதற்கு சிபிஎம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், வ.புதுப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்டது சாலியர் தொடக்கப்பள்ளி. இப்பள்ளிக்கு மேல்புறம் தலித் மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களும், பிற சமூகத்தினரும் பள்ளிக்கு செல்வதற்கும், காட்டு வேலைகளுக்கு செல்வதற்கும் பாதை இருந்தது. சுமார் 100 ஆண்டுகளாக இதே பாதையைத்தான் அனைவரும் பயன்படுத்தி வந்தனர்.
முன்னதாக பள்ளிச் சுற்றுச் சுவர் கட்டும்போது நடைபாதையை விட்டுவிட்டு கட்டியுள்ளனர். இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி நிர்வாகம், அரசு அதிகாரிகளின் துணையோடு இந்த பாதையை பள்ளியின் பெயரில் பட்டா பெற்றுள்ளது.
பின்பு, நடை பாதையை மறித்து சுவர் எழுப்ப பலமுறை முயற்சி செய்துள்ளனர். தலித் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் சுவர் கட்டவில்லை என்று கூறப்படுகின்றது. இதன் அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலர் சுவர் கட்டக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் கடந்த 19-ம் தேதி அன்று ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சிலர் காவல்துறை துணையோடு நடைபாதையை மறித்து சுவரை கட்டியுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கு அப்பகுதி தலித் மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஆனால் காவல்துறை அவர்களை கடுமையாக மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
போலீசாரின் இந்த செயலுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் எஸ். ஞானகுரு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொது நடை பாதையில் கட்டப்பட்டு வரும் தீண்டாமைச் சுவரை உடனடியாக மாவட்ட நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த இடத்திற்கு வழங்கப்பட்ட பட்டாவை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும், தீண்டாமை கொடுமைக்கு துணை போவோர் மீது அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications