மாநகராட்சி ஊழியைகளிடம் செக்ஸ் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்-பிரான்ஸ் அமைச்சர் ராஜினாமா
பாரீஸ்: மாநகராட்சியில் பணியாற்றி வரும் 2 ஊழியைககளிடம் செக்ஸ் ரீதியாக அத்துமீறும் வகையில் நடந்து கொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு துணை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
2 வாரத்திற்கு முன்புதான் நியூயார்க்கில், ஹோட்டலில் தங்கியிருந்தபோது வேலைக்காரப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று கைதானார் சர்வதேச நிதியத்தின் தலைவராக இருந்த டோமினிக் ஸ்டிராஸ் கான். இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். இந்த நிலையில் அதே பிரான்ஸில் ஒரு துணை அமைச்சர் செக்ஸ் புகாருக்கு ஆளாகி பதவியை இழந்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் சிவில் சர்வீஸ் -அதாவது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்தவர் ஜார்ஜஸ் டிரான். இவர் பாரீஸுக்கு அருகே உள்ள டிரவெயில் என்ற மாநகரின் மேயராகவும் இருக்கிறார். இவர் மீது அந்த நகரின் மாநகராட்சியில் பணியாற்றும் இரு பெண் ஊழியர்கள் செக்ஸ் புகார் சுமத்தியுள்ளனர். இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார் டிரான்.
53 வயதாகும் டிரான் மீது 34 மற்றும் 36 வயதாகும் அந்த பெண் ஊழியர்கள் கொடுத்துள்ள புகாரில், எங்களை டவுன்ஹாலில் ஒரு அறையில் பூட்டி வைத்து அடித்து சித்திரவதை செய்தார் டிரான். எங்களைக் கற்பழிக்கவும் முயற்சித்தார். கடந்த 2007 முதல் 2010 வரை இந்த சித்திரவதையை அவர் மேற்கொண்டார்.
டோமினிக் ஸ்டிராஸ்கான் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக வேலைக்காரப் பெண் கொடுத்த புகாரைப் பார்த்து எங்களுக்கும் தைரியம் வந்தது. அதனால்தான் இந்தப் புகாரை தற்போது கொடுத்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் டிரான். இதுகுறித்து அவர் கூறுகையில், என் மீதான புகார் அபத்தமானது, ஆதாரமற்றது, பொய்யானது. இருப்பினும் விசாரணை முறையாக நடக்க வேண்டும் என்பதற்காக நான் ராஜினாமா செய்துள்ளேன் என்றார்.
இந்த ராஜினாமா முடிவை பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியும் வரவேற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications