கிரைண்டர் கல்லால் தாக்கி மனைவி கொலை: கணவன் வெறிச்செயல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கிரைண்டர் கல்லால் தாக்கி மனைவியைக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அருகே உள்ள செட்டியூரணி பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா. இவரது கணவர் சுப்பையா. ஆட்டோ டிரைவர். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பரமசிவம், செல்வம் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
சுப்பையாவுக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. அதனாலேயே கடனில் மூழ்கியுள்ளார். ஆகவே தனது ஆட்டோவை விற்று விட்டு தற்போது கூலி வேலைக்கு சென்று வருகிறார். இருந்தபோதும் குடி பழக்கத்தை மட்டும் அவர் விடவில்லை. பிரேமாவுக்கு பூர்விக சொத்து உள்ளது. அவற்றை விற்று கடனை அடைப்பதற்காக தனது பெயருக்கு அந்த சொத்துகளை எழுதி வைக்குமாறு மனைவியிடம் சுப்பையா கேட்டு வந்தார்.
ஆனால் பிரேமாவோ சொத்தை எழுதித் தர மறுத்துவிட்டார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் சுப்பையா தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலை மற்றும் நெஞ்சில் கிரைண்டர் கல்லால் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த பிரேமா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். இதை தொடர்ந்து சுப்பையா தட்டம்பாறை காவல் நிலையத்துக்கு சென்று நடந்ததைக் கூறி சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
பின்பு சம்பவ இடத்துக்கு வந்து பிரேமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சொத்து தகராறில் மனைவியை கணவரே கொன்ற சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications