கனிமொழி, ராசா 'புண்ணியத்தால்' திகாரில் இட்லி, தோசை, வடை, சாம்பார்!
டெல்லி: 2 ஜி வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விரும்பிக் கேட்டதால் தற்போது திஹார் சிறையில் தமிழக உணவு வகைகளான இட்லி, வடை, சாம்பார் போன்றவையும் கைதிகளுக்காக வழங்கப்படுகிறது.
திஹார் சிறையில் தற்போது மிக முக்கியமான கைதியாக கனிமொழி அடைக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவரான கருணாநிதியின் மகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பது திஹார் சிறையில் உள்ள அத்தனை கைதிகளுக்கும் ஆச்சரியமான விஷயமாக இன்றளவும் விளங்குகிறது.
கனிமொழி தவிர முன்னாள் அமைச்சர் ராசாவும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இவர்களது வரவால் திஹார் சிறையின் நடைமுறைகளில் சில மாற்றங்கள் தென்படுகின்றன. அது உணவு.
இந்த சிறையில் வழக்கமாக வட இந்திய உணவு வகை தான் வழங்கப்பட்டு வந்தது. சப்பாத்தி, சப்ஜி என்று கொடுப்பார்கள். ஆனால் தெற்கத்திக்காரர்களான கனிமொழி, ராசா, சரத்குமார் ரெட்டி ஆகியோர் தங்களுக்கு இட்லி, சாம்பார், வடை வேண்டும் என்று சிறை நிர்வாகத்திற்குக் கோரிக்கை வைத்தனர்.
நம் ஊரில் இட்லி, தோசை, சாம்பார், சாதம் என்று சாப்பிட்ட அவர்கள் திஹார் சிறையில் வழங்கப்படும் சப்பாத்தி, சப்ஜி, பூரியை சாப்பிட்டு நாக்கு மரத்துப் போய் விட்டனர். சப்பாத்தி சாப்பிட்டு கஷ்டப்பட்ட அவர்களுக்காக தற்போது சிறை மெனுவில் இட்லி, தோசை, ஊத்தாப்பம், தேங்காய் சட்னி ஆகியவற்றைச் சேர்த்துள்ளனர்.
ஆனால் இந்த புதிய மெனு சிறை 1, 4 மற்றும் 6ல் மட்டும் தான் கொடு்க்கப்படுகிறது. அது என்ன இங்கு மட்டும் என்று நினைக்கலாம். ஏனென்றால் சிறை 1-ல் ஆ. ராசா, 6-ல் கனிமொழி, 4-ல் சரத் குமார் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ருசியாக உணவு உண்ணத் தான் இந்த புதிய ஏற்பாடு.
திஹார் சிறையில் தினமும் மூன்று வேளை சப்பாத்தி, சாதம், பருப்பு மற்றும் ஒரு காய்கறி கூட்டு கொடுக்கப்படுகிறது. முன்பெல்லாம் கைதிகளுக்கு சோலே பட்டூரா, பூரி சப்ஜி, சமோசா, சான்ட்விச் மற்றும் டீ கொடுக்கப்பட்டது.
திகார் சிறை சமையல்காரர்களுக்கு தமிழக சிறப்பு காவல்படையைச் சேர்ந்த சமையல்காரர் ஒருவர் தென்னிந்திய உணவு வகைகளை சமைக்க பயிற்சியளித்துள்ளார். தற்போதுள்ள புதிய மெனுவால் மற்ற கைதிகளும் குஷியாகியுள்ளனர்.