துப்பாக்கியால் சுட்டாலும், சிறையில் அடைத்தாலும் உண்ணாவிரதம் இருப்பேன் :அன்னா ஹஸாரே

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தாமதமானால் வரும் ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அன்னா ஹஸாரே எச்சரித்தார்.
அன்னாவின் உண்ணாவிரதம் நாடாளுமன்றத்திற்கு சவால் விடும் செயலாகும் என்று அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அன்னா ஹஸாரே பூனேவில் நிருபர்களிடம் கூறியதாவது,
லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தாமதமானால் நான் ஆக்ஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன்.டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் அல்லது ராஜ்காட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் உண்ணாவிரதம் இருக்க அரசு அனுமதி அளிக்கவில்லை என்றால் சிறையிலாவது உண்ணாவிரதம் இருந்தே தீருவேன். தடியடிக்கு பதிலாக என் நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டாலும் உண்ணாவிரதம் இருப்பேன்.
நாட்டுக்காக உயிர் இழக்கத் தயாராக இருக்கிறேன். என் நாட்டு நலனுக்காக போராடும்போது உயிர் இழப்பது எனக்கு பெருமை.
நான் உண்ணாவிரதத்தை துவங்கும் முன்பு அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறேன். காங்கிரஸ் எனது போராட்டத்தை எதிர்த்தாலும் நான் சோனியாவை சந்திப்பது ஒரு ஜனநாயக நடவடிக்கையாகும்.
லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது, அதில் பிரதமரையும் சேர்ப்பது போன்ற கோரிக்கைகளை எதிர்கட்சிகளும் ஏற்காவிடில், காங்கிரஸ் உடன் சேர்த்து எதிர்கட்சிகளுக்கும் எதிராக போராட்டம் நடத்த தயங்க மாட்டோம்.
மக்களை சந்தித்து அந்த கட்சிகளுக்கெல்லாம் வாக்களிக்காதீர்கள் என்று வலியுறுத்துவோம்.
லோக்பால் வரவம்புக்குள் பிரதமர் பதவியை கொண்டு வர மன்மோகன் சிங் பயப்படவில்லை, அவரை இயக்கும் ரிமோட் கன்ட்ரோல் தான் பயப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications