தனியாரிடம் 900 மெவா மின்சாரம் வாங்கும் தமிழக அரசு!
சென்னை: தமிழகத்தின் மின் தேவையைக் கருத்தில் கொண்டு தனியார் நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்க முடிவு செய்துள்ளது தமிழக அரசு.
தமிழ்நாட்டின் மின்சார தேவை 12 ஆயிரம் மெகாவாட். ஆனால் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்படுகிறது. 5 ஆயிரம் மெகாவாட் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பற்றாக்குறையை குறைக்க வெளி மாநிலங்களில் இருந்து 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. அப்படியும் 3 ஆயிரம் மெகாவாட் மின்சார பற்றாக்குறை இருந்து வருகிறது. இதை சமாளிக்க நாள்தோறும் 2 மணி நேர மின்தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் தனியாரிடம் இருந்து மின்சாரத்தை பெற, தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து 5 ஆண்டுகளுக்கு 400 மெகாவாட் மின்சாரம் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சமீபத்தில் டெண்டர் விட்டுள்ளது. 2011 டிசம்பர் 10-ந் தேதி முதல், 2016 டிசம்பர் 9-ந் தேதி வரை மின்சாரம் வழங்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த 400 மெகாவாட் மின்சாரத்தைப் பெற்று சப்ளை செய்ய தொடங்கிய உடனேயே தனியார் நிறுவனங்களிடம் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் பெறுவதற்கான, மற்றொரு டெண்டர் வெளியிடப்படும்.
வள்ளூரில் தமிழ்நாடு மின்சார வாரியமும், தேசிய அனல் மின் உற்பத்தி கழகமும் இணைந்து மேற்கொண்டு வரும், 500 மெகாவாட் மின் உற்பத்தி பிரிவு, கிட்டத்தட்ட சோதனை இயக்க அளவில் தயாராகி விட்டது. இந்த திட்டம் முழு அளவில் முடிக்கப்பட்டு விட்டால், மின் பற்றாக்குறை பெருமளவில் குறைந்து விடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications