தமிழக-கேரள எல்லையில் போலிச் சான்றிதழ் தயாரித்து விற்பனை: 2 பேர் கைது
கொல்லம்: தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் போலிச் சான்றிதழ் தயாரித்து வழங்கிய 2 பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளான தென்காசி, செங்கோட்டையில் பிறப்பு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் போன்றவை போலியாக தயாரிக்கப்பட்டு அதிக விலைக்கு வழங்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கொல்லம் போலீசார் தனிப்படை அமைத்து போலிச் சான்றிதழ் தயாரிப்பவர்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையி்ல் கொல்லம் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர நாயர் மற்றும் சுகுமார் என தெரிய வந்தது.
அவர்களது வீட்டில் சோதனை செய்தபோது ஏராளமான போலிச் சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டன. தென்காசி, செங்கோட்டை நகராட்சிக்குரிய சீல், பிறப்பு சான்றிதழ்கள், வாக்காளர் அடையாள அட்டை, கேரள மாநில ஓட்டுனர் உரிமம், அரசு முத்திரைகள் உள்பட போலிச் சான்றிதழ்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட அனைத்தும் கைப்பற்றப்பட்டன.
அவர்களை கைது செய்த கேரள காவல்துறை யார், யாருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது, மேலும் அவர்களது கூட்டாளிகள் யார், யார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழக-கேரள எல்லையோரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications