சிறுவன் தில்ஷன் தலையில் குண்டு பாய்ந்துதான் இறந்தான்-பிரேதப் பரிசோதனை அறிக்கை

சென்னையை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது சிறுவன் தில்ஷன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம்.
தீவுத் திடல் ராணுவக் குடியிருப்புப் பகுதி அருகே உள்ள இந்திரா நகரில் வசித்து வந்த 13 வயது தில்ஷன், தன்னுடைய நண்பர்களுடன் ராணுவக் குடியிருப்பு வளாகத்திற்குள் உள்ள பாதாம் மரத்தின் கீழே விழுந்து கிடந்த பழங்களை எடுப்பதற்காக உள்ளே போனபோது ராணுவ வீரர் ஒருவர் சுட்டதில் பரிதாபமாக உயிரிழந்தான்.
ஆனால் தாங்கள் யாரும் சுடவில்லை, சம்பவம் நடந்தபோது அந்தப் பகுதியில் துப்பாக்கியுடன் எந்தப் பாதுகாவலரும் இல்லை. சாதாரண குச்சியுடன் தான் வாட்ச்மேன் மட்டுமே இருந்தார் என்று ராணுவ பிரிகேடியர் சசி நாயர் என்பவர் கூறியிருந்தார்.
மேலும், சிறுவர்களை விரட்ட லேசான தடியடி நடத்தியபோது சுற்றுச் சுவர் கம்பியில் மோதி சிறுவன் காயமடைந்து பின்னர் உயிரிழந்ததாகவும், துப்பாக்கிச் சூடு நடக்கவில்லை என்றும் ராணுவத் தரப்பு மறுத்திருந்தது.
ஆனால் தற்போது சிறுவன் தில்ஷன் குண்டு பாய்ந்துதான் இறந்தான் என்று பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் யார் சிறுவனை சுட்டது என்பது பெரும் குழப்பமாகியுள்ளது. இதையடுத்து சம்பவத்தின்போது தில்ஷனுடன் இருந்த 2 சிறுவர்களை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ராணுவம் ஒத்துழைக்க வேண்டும் என்று காவல்துறை தரவிப்பில் ராணுவத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உடல் அடக்கம் செய்யப்பட்டது
இந்த நிலையில் சிறுவன் தில்ஷனின் உடல் இன்று அடக்கம் செய்யபப்பட்டது. அரசு மருத்துவனையில் பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பின்னர் சிறுவனின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் தில்ஷனின் உடல் ஊர்வலமாக மூலக்கொத்தளம் மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications