2 ஜி வழக்கு விசாரணை அறிக்கை: உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல்!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு சி.பி.ஐ.நீதிமன்றம் விசாரிக்கிறது. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் 2-ந் தேதி பிரதான குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு, ஏப்ரல் 25-ந் தேதி அன்று 2-வது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது.
இந்த இரண்டு குற்றப்பத்திரிகைகளிலும் ஆ.ராசா, கனிமொழி உட்பட 14 பேருடைய பெயர்களும் 3 செல்போன் நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றன. எனவே, குற்றப் பத்திரிகைகளில் இடம் பெற்ற ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, ஜுலை முதல் வாரத்தில் 3-வது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்து நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது.
ஆனால், 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான ஆதாரங்களை திரட்டுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தவிர, பல்வேறு காரணங்களால் திட்டமிட்டபடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை. எனவே, இந்த மாதம் (ஜுலை) இறுதியில் தான் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய முடியும் என சி.பி.ஐ. கருதுகிறது.
இதைத் தொடர்ந்து, ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையின் தற்போதைய நிலைமை குறித்த விளக்க அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் இன்று சி.பி.ஐ. தாக்கல் செய்கிறது.
கனிமொழி - ராசா ஆஜர்
இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் வழக்கை பிரத்தியேகமாக விசாரித்து வரும் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி ஷைனி முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் ஆஜர் படுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அளிக்கப்பட்டன.
அப்போது நீதிபதி ஓ.பி.ஷைனி கூறுகையில், "இந்த வழக்கில் வக்கீல்கள் வாதங்களை அடுத்த திங்கள் கிழமை (ஜுலை 11) முதல் ஆரம்பிக்கலாம். வழக்கு தொடர்பான ஆவணங்களை பரிசீலிக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு சி.பி.ஐ. மற்றும் அரசு தரப்பை கேட்டுக் கொள்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆவணங்கள் வழங்கப்படாத பட்சத்தில் கோர்ட்டு அபராதம் விதிக்க நேரிடும்'' என்றார்.
மேலும் கலைஞர் டிவிக்கு வந்த ரூ 214 கோடி வழக்கில் கைது செய்யப்பட்டு, இப்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கரீம் மொரானி உடல்நிலை குறித்து முழுமையான அறிக்கை தாக்கல் செய்யாத சி.பி.ஐ. மீது நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
இது குறித்து நீதிபதி அஜித் பரிஹோகே கூறுகையில், "நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையில் எம்.ஆர்.ஐ. மற்றும் ஊடுகதிர் சோதனை முடிவுகள் மட்டுமே உள்ளன. டாக்டர்கள் அளித்த அறிக்கை எதுவுமே இல்லை. இதை வைத்து என்ன செய்ய முடியும்? இன்னும் 3 நாட்களுக்குள் முழுமையான மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்,'' என்றார்.












Click it and Unblock the Notifications