லோக்பால் விசாரணை வரம்புக்குள் முன்னாள் முதல்வர்களையும் சேர்க்க வேண்டும்- இளங்கோவன்
மழை விட்டும் தூவானம் விடாத கதையாக தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியையும், திமுகவையும் விமர்சித்து வருகிறார் இளங்கோவன்.
சென்னை தாம்பரத்தில் நடந்த கூட்டத்தில் இளங்கோவன் பேசுகையில்,
லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரைச் சேர்க்க வேண்டும் என்று தி.மு.க. கோரி உள்ளது. அப்படியானால் முன்னாள் முதல்வர்களையும் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.
ஒவ்வொரு பதவிக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது கருணாநிதி காலத்தில்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. லஞ்சத்தை விஞ்ஞான ரீதியாகச் செய்தவர் என்று நீதிபதி சர்க்காரியா கமிஷன் சான்றிதழ் கொடுத்ததா? இல்லையா?
ஜெயலலிதாவிடம் ஆரம்பமே நன்றாக உள்ளது. ஆட்சிக்கு வந்தபின் கருணாநிதி கட்டிய கோட்டையில் நான் இருக்க மாட்டேன் என்று சொன்னபோது, இவர் இன்னும் மாறாமல் பழைய மாதிரியே இருக்கிறாரே என்று எண்ணினேன். ஆனால் டெல்லியில் பத்திரிகையாளர்களிடம், கட்டடம் முழுமையாக கட்டி முடியாத நிலையில் சினிமாக்காரர்களை வைத்து செட் போட்டு திறப்புவிழா நடத்திய கட்டடத்தில் அனைத்து அரசு அலுவலகங்களையும் வைக்க முடியாது என்று அவர் அளித்த விளக்கம் பொருத்தமாக இருந்தது.
நான் யாருக்காகவும் வக்காலத்து வாங்கவில்லை. திமுக கூட்டணி வெற்றி பெற்றபோது காமராஜர் என்ன சொன்னார்? ஆறு மாதங்கள்வரை திமுகவின் ஆட்சிபற்றி ஒரு வார்த்தை சொன்னாரா? ஆட்சிக்கு வந்தால் 6 மாதம்வரை ஆள விட வேண்டும்.
மயிலாப்பூரில் நடந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது நாங்கள் தவறு செய்யவில்லை. அ.தி.மு.க அரசு வேண்டுமென்றே பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது என்று பேசியுள்ளார். எனக்குத் தெரியும், உங்களுடன் இருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் வரிசையாகப் புகார் வந்து கொண்டிருக்கிறதே?
கூடா நட்பு என்று நாங்கள் சொல்ல வேண்டியதை நீங்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளது. ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்துவிட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருப்பவர்களை சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போல வர்ணிப்பது எந்த வகையில் நியாயம்? என்றார் அவர்.