நாளை மத்தியமைச்சரவை மாற்றம்: நடிகர்கள் ராஜ்பப்பர், சிரஞ்சீவிக்கு அமைச்சர் பதவி?

நீண்ட நாட்களாக மத்தியமைச்சரவை மாற்றப்படும் என்று கூறப்பட்டு வந்தது. இறுதியாக நாளை மத்தியமைச்சரவை மாற்றியமைக்கப்படுகிறது. நாளை மாலை 5. 30 மணிக்கு புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியமைச்சரவை மாற்றம் குறித்து நேற்று பிரதமரும், சோனியா காந்தியும் சந்தித்து பேசினர். இன்று மீண்டும் சந்தித்து இது குறித்து பேசவிருக்கின்றனர். 2ஜி விவகாரத்தில் சிக்கி திமுக அமைச்சர்கள் ஆ.ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இந்த அமைச்சரவையில் ராசா, தயாநிதி மாறனுக்குப் பதிலாக திமுகவுக்கு 2 அமைச்சர் பதவிகளைக் கொடுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ஆனால் இலாக்காக்கள் அறிவிக்கப்படவில்லை.
ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி மேற்கு வங்க முதல்வராகி விட்டதால் அவருக்குப் பதிலாக தினேஷ் திரிவேதி நியமிக்கப்படுகிறார். முகுல்ராய் கப்பல் துறை இணை அமைச்சராக நீடிப்பார். தினேஷ் திரிவேதியிடம் இருந்த சுகாதாரத் துறை சுதிப்புக்கு வழங்கப்படுகிறது.
மேலும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் முரளி தியோரா பதவி விலகப் போவதாக ஏற்கனவே முடிவு செய்துவிட்டார். அவருக்கு பதிலாகவும் புதிதாக ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இந்தி நடிகர் ராஜ்பப்பர், ஆந்திராவில் காங்கிரசுடன் இணைந்த நடிகர் சிரஞ்சீவி மற்றும் ராஷ்டிரிய லோக்தளம் கட்சி தலைவர் அஜித்சிங் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
லாலுபிரசாத் யாதவ் மீண்டும் மத்தியமைச்சரவையில் இடம்பிடிக்க முயற்சித்து வருகிறார். ஆனால் அவரை அமைச்சராக காங்கிரஸுக்கு விருப்பமில்லை.
நிதித்துறை, உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டும் மாற்றப்படவில்லை. மற்ற அமைச்சர்கள் பலர் மாற்றப்படும் வாய்ப்புள்ளது.
கபில் சிபிலிடம் கூடுதலாக வழங்கப்பட்ட தொலைத் தொடர்பு துறை பறிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications