ரவுடி வெட்டிக் கொலை: திமுக நகர செயலாளர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
ஆறுமுகநேரி: ஆறுமுகநேரியில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காணியாளர் தெருவைச் சேர்ந்தவர் சசிகுமார். நாம் தமிழர் கட்சியின் ஆறுமுகநேரி நகர பொறுப்பாளர். இவர் மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்குகள் உள்ளன. ரவடிகள் பட்டியலிலும் சசிகுமார் பெயர் உள்ளது.
ஆறுமுகநேரியில் கடந்த மார்ச் மாதம் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் திமுக நகர செயலாளர் சுரேஷை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி செய்த வழக்கில் சசிகுமாரை ஆறுமுகநேரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற அவர் தனது மனைவி ஞானசெல்வியுடன் குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடியில் வாடகை வீ்ட்டில் வசித்து வந்தார்.
கொலை முயற்சி வழக்கு தொடர்பாக தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு நேற்று முன்தினம் சென்றார். நேற்று காலை ஆறுமுகநேரி செல்வதற்காக நாலுமாவடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை மினி பஸ்சில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
இது குறித்து குரும்பூர் இன்ஸ்பெக்டர் பட்டாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், கதிரேசன், அந்தோணி, துரைசிங்கம், ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தங்கராஜ் என்பவரை கொலை செய்த வழக்கு மற்றும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வியாபாரியின் மகனை கொலை செய்த வழக்கு ஆகியவற்றில் தொடர்புடையவர் சசிகுமார். மேலும் திமுக நகர செயலாளர் சுரேஷை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதால் அந்த சம்பவம் தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதினர்.
அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தினர். அதில் ஆறுமுகநேரி திமுக நகர செயலாளர் சுரேஷ், தூத்துக்குடி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜேசுராஜ் உள்பட 4 பேர் சேர்ந்து சசிகுமாரை வெட்டி கொன்றது தெரிய வந்தது. எனவே, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications