வாணியம்பாடி-தோல் தொழிற்சாலை அதிபர் வீட்டில் ரூ. 1 கோடி கொள்ளை
வேலூர்: வாணியம்பாடி தோல் அதிபர் வீட்டில் ரூ. 1 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி காக்கி தெருவைச் சேர்ந்தவர் நூருல்லா பாஷா. பிரபல தோல் தொழிற்சாலை அதிபர்.
இவர் வாரத்தில் 5 நாட்கள் வாணியம்பாடியிலும், 2 நாட்கள் சென்னையிலும் தங்கியிருந்து தொழிலை கவனித்து வந்தார்.
இவர் வெளியூர் செல்லும் போது தனது வீட்டை பூட்டி பக்கத்து வீட்டில் சாவியை கொடுத்து விட்டுச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நூருல்லாவின் வீட்டின் கதவை உடைத்து பீரோ மற்றும் லாக்கரில் இருந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள பணம், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த தகவல் வெளியூர் சென்ற நூருல்லா பாஷாவுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் பாஷா ஊருக்கு திரும்பினார்.
இந்த கொள்ளை குறித்து நூருல்லா பாஷா போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications