அதிமுக ஆட்சியில் "இம்" என்றால் சிறைவாசம், "ஏன்" என்றால் வனவாசம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
மதுரை: அல்லல் நீங்கும் தொல்லை குறையும் என்ற தலைப்பில் தனது தொண்டர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியில் திமுக தலைவர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

உடன்பிறப்பே,

"ஆரம்பமாகி விட்டன அரூபத்தின் லீலைகள்!" என்று "மனோகரா" படத்தில் ஒரு உரையாடல் கேட்டிருப்பாய்! அதைத் தொடர்ந்து வருகின்ற வசந்த சேனையின் அட்டகாசங்களையும் பார்த்திருப்பாய்!

எதுவுமே அறியாமல் அவள் மடிதான் தனக்குச் சொர்க்கலோக மெத்தை என்று கூறிக் கொண்டு சொக்கிக்கிடக்கும் புருசோத்தம மன்னனையும் கண்டிருப்பாய்!

இப்படி அந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் மனோகரனாலும், அவனைப் பெற்றெடுத்த பத்தினித் தங்கமாம் பத்மாவதியின் சாபத்தினாலும் எப்படியெல்லாம் பட்டொழிந்தார்கள்; கெட்டுத் தொலைந்தார்கள் என்ற முடிவையும் ரசித்து மகிழ்ந்திருப்பாய்.

இது நாடகத்தில்-திரைக்காவியத்தில் படமாக மட்டுமல்ல; பாடமாகவும் உன் நெஞ்சில் பதிய வைக்கப்பட்ட பம்மல் சம்மந்தனார் எழுதிய பழைய சரித்திரத்தின் ஒரு புதிய பொன்னேடு.

அந்த ஏடு இதோ மீண்டும் திரும்புகிறது என்பதற்கு அடையாளமாக தமிழகத்தில் ''கள்ளி""யாகப் படர்ந்துள்ள புதிய அரசு "பழையகள், புதிய மொந்தை" என்ற பழமொழிக்கேற்ப, தன்னுடைய அராஜக ஆட்டத்தை இதோ மீண்டும் தொடர்ந்திருக்கின்றது.

குற்றங்கள், தவறுகள், கொள்ளைகள், கொலைகள் எங்கே நடைபெற்றாலும், அதை யார் நடத்தினாலும், அவர்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்று சொல்லுகின்ற இமாலயத் தவறினை நாம் என்றைக்கும் செய்திட மாட்டோம். அப்படிச் செய்பவர்களை மன்னிக்கவும் தயாராக இருக்க மாட்டோம்.

இதோ! இரண்டொரு மாதங்களுக்கு முன்பு ஏமாந்த தமிழ் நாட்டு மக்களால் அவர்கள் தோளில் ஏறிக் கொண்டு ஆட்சிக்கு வந்துள்ள ஒரு கட்சி, அராஜகத்தை தன்னுடைய ஆபரணமாகவும், அடக்குமுறையை தனது போர் வாளாகவும் "இம்" என்றால் சிறைவாசம், "ஏன்" என்றால் வனவாசம் என்ற ஜார் மன்னனின் இரக்கமற்ற கூச்சலை இசைப் பாடலாகவும் ஆக்கிக் கொண்டு

"எதிர்க்கட்சிகளை குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தினரை அவர்கள் குற்றம் செய்திருந்தாலும், அந்தக் குற்றத்தின் பக்கமே தலைகாட்டாமல் இருந்திருந்தாலும் எல்லோரையும் சகட்டு மேனிக்கு குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவேன், சட்டத்தின் பெயரைச் சொல்லி சவுக்கடி கொடுப்பேன்; மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எல்லோரிடமிருந்தும் அவர்களைப் பிரித்து தனிமைப்படுத்தி

முடிந்தால், தணலில் வேண்டுமானாலும் போட்டுப் பொசுக்குவேன்" என்று ஆங்காரக் கூச்சலிட்டு, ஓங்கார முழக்கம் செய்து தன் முதுகிலே இருக்கிற புண்ணுக்கு மருந்து தடவிடவும் மறந்து விட்டு நாட்டையே சுடுகாடாக ஆக்கி; "மாகாளி" நர்த்தனம் ஆடுவேன் என்று தன் காலடியில் உள்ள காவல் துறை உள்ளிட்ட எல்லா துறைகளையும் வாயில் நுரை பொங்க வாட்டி வதைத்து

"இதோ வந்தேனடா எங்கும் காண முடியாத பத்ரகாளி" என்று பல்லைக்கடித்து, நாக்கை நீட்டி, ரத்தப் பலி வரையிலே கேட்பேன் என்று நித்தம் உரைக்கின்ற காட்சியை நாம் காணுகிறோம்.

நினைத்ததை முடிப்பேன் என்று நினைத்த படியெல்லாம் திட்டங்களை அறிவித்து பள்ளிச் சிறார், துள்ளித் திரியும் பருவத்தினர் எள்ளி நகையாட- எல்லா அறிவிப்புக்களுமே மக்கள் மன்றத்தில், நீதிமன்றத்தில் தூள்தூளாக நொறுங்கிப்போவது கண்டு மேலும் மேலும் எரிச்சல் மிகக் கொண்டு "எங்கிருக்கிறான் எதிர்க்கட்சித் தோழன்? எங்கிருக்கிறது அவன் குடும்பம் ? எங்கே போய்விடுவார்கள் என் வஞ்சக வலையில் சிக்காமல் ?" என்று பொய்த்திரை போட்டு

இந்தப் புவியில் வாழ்வோர் கண்களை இருட்டாக்கி, இன்னும் எத்தனை காலம் இங்குள்ளவரை ஏமாற்ற நினைத்திடுவார் என்ற முழக்கம் எங்கெங்கு திரும்பினும் கேட்கு தடா! எட்டுத் திசையும் ''இனி தொலைவாய்"" என்ற முழக்கமடா.

இது தான் இன்றைய தமிழ்நாட்டு நிலை. இந்த நிலை மாற்ற நெருப்பின் பொறிகளே. நீங்கள் தான் தேவையென்று திராவிட இன இளைஞர்களை அன்று தட்டி எழுப்பிய பெரியாரும், அண்ணாவும் இதோ ஒன்றாக ஓரணியில் நின்று உங்களை அழைக்கின்றார்கள்.

அறப்போர் குறித்து ஆயிரம் சாதனைகளைப் படைத்த அண்ணன், தம்பிகளே! ஆருயிர் உடன்பிறப்புகளே! அதோ, தெரிகிறது வெளிச்சம். அதை நோக்கி விரைந்து நடந்து வாருங்கள்.

அல்லல் நீங்கும்! தொல்லை குறையும் !

இவ்வாறு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+