திமுகவிற்கு எதிர்காலமே இல்லை: இளைஞர் காங்கிரஸ்
ஈரோடு: இலங்கை தமிழர்களுக்காக ராஜீவ் காந்தி உயிர் தியாகம் செய்தார். ஆனால் திமுகவில் இது போல் யாராவது உயிர் தியாகம் செய்தது உண்டா? திமுகவிற்கு இனி எதிர்காலம் இருப்பதாக தெரியவில்லை. அது கேள்விக்குறியாக உள்ளது என்று இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பாதயத்திரை மேற்கொண்ட இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு பாரட்டுவிழா ஈரோட்டில் நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜா தலைமை தாங்கி, உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்பு அவர் பேசியதாவது, கடந்த திமுக அரசின் தவறுகளை இளைஞர் காங்கிரஸ் நடை பயணத்தின்போது நான் சுட்டிக்காட்டினேன். ஆனால் அவர்கள் தவற்றை திருத்திக்கொள்ளவில்லை.
மின்தட்டுப்பாட்டைப் போக்க திமுகவுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை. சாயக்கழிவை கடலில் கலக்கவிடாமல் தடுக்க அப்போது மத்திய அரசு கொடுத்த நிதியையும் திமுக அரசு சரியாக பயன்படுத்தவில்லை.
ஆனால் சட்டமன்ற தேர்தலில் சூழ்நிலை காரணமாக நாம் திமுகவுடன் கூட்டணி வைக்க நேர்ந்தது. திமுகவுடன் சேர்ந்தால் தோல்வி நிச்சயம் என தெரிந்து தான் கூட்டணி அமைத்தோம்.
தேர்தல் முடிவுக்கு பிறகும் நமது கட்சியில் பெரிய தலைவர்கள் கூட வெளியேவர முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளராததற்கு காரணம் நம்மிடம் ஒற்றுமையில்லாதது தான்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இளைஞர் காங்கிரஸ் சார்பில் 7 ஆயிரத்து 100 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
இலங்கை தமிழர்களுக்காக ராஜீவ் காந்தி உயிர்தியாகம் செய்தார். ஆனால் திமுகவில் இது போல் யாராவது உயிர் தியாகம் செய்தது உண்டா? திமுகவிற்கு இனி எதிர்காலம் இருப்பதாக தெரியவில்லை. அது கேள்விகுறியாக உள்ளது.
தவறு மேல் தவறு செய்து விட்டு டெல்லி திகார் சிறையில் தற்போது உள்ளே இருப்பது யார் என்று உங்களுக்கு நன்கு தெரியும். எத்தனை பொதுக் கூட்டம் போட்டலும் உண்மையை நிச்சயம் மறைக்க முடியாது என்றார்.
சீமானை கைது செய்ய கோரிக்கை:
இந் நிலையில் யுவராஜா இன்று சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து இன்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில்,
இயக்குனர் சீமான் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்தும், சோனியா, ராகுல் ஆகியோரை விமர்சித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். ஏற்கனவே அவர் மீது புகார் செய்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அவருடன் வந்தவர்கள் சீமானுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர்.












Click it and Unblock the Notifications