சென்னை மோனோ ரயில் திட்டம்: ஹிடாச்சி நிறுவனத்துக்கு வாய்ப்பு?

சென்னையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மோனோரயில் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்காக மத்திய அரசு நிதி உதவியும் கோரப்பட்டுள்ளது.
இப்போது மோனோ ரயில் அமைப்பதற்கான வழிகள், அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
மோனோ ரயிலுக்கான தொழில்நுட்பத்தை வழங்க ஜப்பானின் முன்னணி நிறுவனமான ஹிடாச்சி நிறுவனம் தமிழக அரசுடன் பேச்சு நடத்தி வருகிறது. மிட்சுபிஷியுடன் இணைந்து இந்த தொழில்நுட்பத்தை ஹிடாச்சி வழங்கக் கூடும் எனத் தெரிகிறது.
சென்னையில் அதிக இடப்பரப்பை ஆக்கிரமிக்காத வகையில் மோனோரயில் வழித்தடம் அமைப்பது, அதிகபட்ச பாதுகாப்பு போன்றவை குறித்து நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழக அரசு அதிகாரிகளுடன் ஹிடாச்சி நிறுவனத்தினர் பேச்சு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மிட்சுபிஷி நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏற்கெனவே மும்பை, டெல்லி போன்ற நகரங்களுக்கு இந்த மோனோ ரயில் வசதியை அளிப்பது குறித்து பேசி வருகிறோம். 90 மீட்டர் நீள பிளாட்பாரம், 6 பெட்டிகள் கொண்ட ஒரு மோனோ ரயிலில் ஒரு மணி நேரத்துக்கு 63000 பேர் பயணிக்கும் அளவுக்கு மோனோ ரயிலை வடிவமைக்க முடியும்," என்றார்.
ஹிடாச்சி நிறுவனம் ஏற்கெனவே ஜப்பானில் 6 மோனோ ரயில் திட்டங்களை நடத்தி வருகிறது. மொத்தம் 306 பெட்டிகள் இந்த ரயில்களில் உள்ளன.
கொரியா, சீனா, துபாய் மற்றும் சிங்கப்பூரில் இயங்கும் மோனோ ரயில் திட்டப் பணிகளை செய்து கொடுத்தது ஹிடாச்சியின் 'யோஷிடாகா ஹிபராயாவும்' மிட்சுபிஷியின் 'கொய்ச்சி ஹட்டோரியும்தான்' என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications