மாஜி உளவுத்துறை அதிகாரி கூடுதல் டிஜிபி ஜாபர்சேட் சஸ்பெண்ட்

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் உளவுப்பிரிவு தலைவராக இருந்தவர் ஜாபர் சேட். முதல்வராக இருந்த கருணாநிதியிடம் தனி செல்வாக்கு வைத்திருந்தார். அந்த சமயத்தில் விதிமுறைகளுக்குப் புறம்பாக ஜாபர்சேட்டுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் இடம் ஒதுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுகுறித்த விசாரணை முடுக்கி விடப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், மகள் ஜெனீபர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் ஜாபர்சேட், அவரது நண்பர்கள், மாமனார் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களிலும் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. மண்டபத்தில் கூடுதல் டிஜிபியாக இருந்து வரும் ஜாபர்சேட்டின் மண்டபம் அலுவலகத்திலும் ரெய்டு நடந்தது.
இதில் பல்வேறு சிடிக்கள், ஐபாட்கள் உள்ளிட்டவை சிக்கின. அதில் கருணாநிதி தனது குடும்பத்தினருடன் பேசும் பேச்சையே ஜாபர்சேட் டேப் செய்து வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி அனைவரையும் அதிர வைத்தன.
இந்த நிலையில் ஜாபர்சேட்டை சஸ்பெண்ட் செய்து உள்துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ் ராம் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். விரைவில் சேட்டிடம் விசாரணை நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications