பீகாரில் 2 கருப்பைகளில் 2 குழந்தைகளைப் பெற்ற பெண்: மருத்துவ அதிசயம்
பொதுவாக பெண்களுக்கு ஒரு கருப்பை தான் இருக்கும். 50 மில்லியன் பெண்களில் யாராவது ஒருவருக்கு 2 கருப்பைகள் இருக்கும்.
பீகார் தலைநகர் பாட்னாவின் வட பகுதியிலுள்ள மதுராபூர் சாகியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரிங்கு தேவி (28). அவரது கணவர் ராணுவ புலனாய்வு அதிகாரி. நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவரை முசாபர்பூரில் உள்ள மாத்தி சதான் பாரிஜாத் நர்சிங் ஹோமில் பிரசவத்திற்காக சேர்த்தனர். கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு சிசேரியன் முறையில் 2 ஆண் குழந்தைகள் பிறந்தன.
2 குழந்தைகள் பெற்றெடுத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் அந்த குழந்தைகள் 2 கருப்பைகளில் ஜனித்துள்ளது. இது மருத்துவ உலகில் ஒரு அதிசயமாகும்.
இரண்டு கருப்பைகளில் உருவாகி பிறக்கும் குழந்தைகள் மிகக் குறைந்த எடையுடன், குறைமாதத்தில் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் இத்தகைய பிரசவத்தில் குழந்தைகளுக்கோ, தாய்க்கோ ஆபத்து ஏற்படலாம்.
ரிங்குவின் குழந்தைகள் இரண்டும் 1.5 கிலோ, 2 கிராம் எடையுடன் பிறந்துள்ளன. சிசேரியன் முறையில் பிறந்தாலும் தாயும், சேயும் நலமாக உள்ளனர். ரிங்குவிற்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுக பிரசவத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது.
எனக்கு இரட்டையர்கள் பிறக்கப்போகிறார்கள் என்று தெரியும். ஆனால் பிரசவ வலியின்போது தான் எனக்கு 2 கருப்பைகள் இருப்பது தெரியும் என்று ரிங்கு தெரிவித்தார்.