பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அதிகபட்ச மதிப்பெண் சலுகை 10% தான் -உச்ச நீதிமன்றம்

சென்னை ஐஐடியைச் சேர்ந்த முன்னாள் பேராசிரியர் இந்தரேசன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பல்வேறு கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்போது குறைந்தபட்ச மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில் வரம்பே இல்லை என்றும், அதில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாகவும், குறைந்தபட்ச மதிப்பெண் சலுகை 10 சதவீதமாக இருக்கலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான பெஞ்ச், பொதுப் பிரிவு மாணவர்களில் கடைசி மாணவர் எந்த மதிப்பெண்ணில் அடிப்படையில் சேர்க்கப்பட்டாரோ அதை, அடிப்படையாக வைத்து பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சலுகை தரக் கூடாது.
ஒட்டுமொத்தத்தில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண்ணைவிட 10 சதவீதம் மட்டுமே பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் குறைவாக இருக்கலாம். இதற்கு மேல் சலுகை தரக் கூடாது.
அதே நேரத்தில் இதற்கு முன் மாணவர் சேர்க்கை நடந்த கல்வி நிலையங்களுக்கு இந்தத் தீர்ப்புப் பொருந்தாது. எதிர்கால மாணவர்கள் சேர்க்கையில் இந்தத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டு சலுகை விஷயத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதே என்று தீர்ப்பளித்தனர்.
இதனால் இனிமேல் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில், அதிகபட்ச சலுகைகளைக் காட்ட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications